இந்தியாவின் மைசூர் விலங்கியல் தோட்டத்திலிருந்து, அருகிவரும் இனத்தைச் சேர்ந்த இரண்டு இளம் ஒட்டகச்சிவிங்கிகள் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. இவை, விலங்கியல் தோட்டத்தின் மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் நேற்று முதல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட் டுள்ளன.
பாலாஜி, அடில் எனும் இந்த இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளுக்கும் சுமார் ஒரு வயதாகிறது. இவை மிகவும் அருகி வரும் ரோத்ஸ்சைல்ட் (Rothschild) வகை ஒட்டகச்சிவிங்கிகளாகும். தற்போது இரண்டாயிரத்துக்கும் குறைவான இந்த வகை ஒட்டகச்சிவிங்கிகள் தான் காடுகளில் உள்ளன.
மாநிலம் விட்டு மாநிலம் 22 மணிநேரம் சாலை வழியாகவும் ஏழு நாள் கப்பலிலும் பயணம் செய்து, கடந்த மே மாதத்தில் ஒட்டகச்சிவிங்கிகள் ஜூரோங் துறைமுகத்தை அடைந்தன.
கொவிட்-19 நோய்ப் பரவலால் விமானம் வழி இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளையும் கொண்டுவர முடியவில்லை என்று சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் கூறியது.
வேகமாக வளர்ந்துவரும் ஒட்டகச்சிவிங்கிகளை சில காலத்துக்குப் பின்னர் எந்தவிதமான போக்கு வரத்திலும் வேறு இடத்துக்கு மாற்ற முடியாது. அதனால், அவர்களை இவ்வாறு கொண்டுவருவது பற்றி குழு ஆராய்ந்ததாக விலங்கியல் தோட்டம் கூறியது.
இரண்டையும் பிஏசிசி கப்பல் நிறுவனத்தை நடத்தும் குவொக் சிங்கப்பூர் நிறுவனம் தத்து எடுத்துக்கொண்டுள்ளது.
இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளும் பிஏசிசி கப்பல்களில் ஒன்றில்தான் இங்கு வந்து சேர்ந்தன.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் ஏற்கெனவே வசிக்கும் அப்பா பிள்ளையான மார்க்கோ, ஜூபிலி, ஒட்டகச்சிவிங்கிகளுடன் புதிய வரவு களுடன் தங்கும்.
இங்கேயே நிரந்தரமாகத் தங்கவுள்ள இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளும் 20 முதல் 25 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டமும் மைசூர் விலங்கியல் தோட்டமும் கடந்த 2010லிருந்து விலங்கு களைப் பரிமாறிக் கொண்டு வருகின்றன.