சிங்கப்பூரின் காற்றுத்தரம் கடந்த ஆண்டின் எல்லா நாளும் 'மிதமான' அல்லது 'நல்ல' அளவில் இருந்ததாக தேசிய சுற்றுப்புற ஆணையத்தின் புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
மழை கூடியதும் கொவிட்-19 சூழலால் பொருளியல், போக்கு வரத்து நடவடிக்கைகள் குறைந்ததும் அதற்குக் காரணங்கள் என்று கண்டறியப்பட்டது.
எனினும், சிங்கப்பூரின் காற்றுத் தரக் குறியீட்டின் பல தனிப்பட்ட அம்சங்கள், உலக சுகாதார அமைப்பின் புதிய தர அளவுகளை எட்டவில்லை.
வழக்கமாக அவ்வளவு மழை பெய்யாத செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கடந்த ஆண்டு மழை பெய்ததால் புகைமூட்டம் ஏற்படவில்லை. அதனால் பிஎம் 2.5 அளவிலான மாசுக்காற்று அதிகரிக்க வில்லை என்றது அறிக்கை.
கடந்தாண்டு ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஜூன் முதல் தேதி வரை நீடித்த கிருமிப் பரவல் நடவடிக்கைகளின்போது, அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகள் இல்லாத அளவுக்கு காற்றை மாசுபடுத்தும் வாயுக்கள் குறைந்து காணப்பட்டதாக காற்று, நீர்த்தர அறிக்கை தெரிவித்தது.

