பசுமை முறிகள் (Green Bonds) துறையில் அரசாங்கத்தின் முயற்சிகளை முடுக்கிவிடுவதற்குத் தோதாக ஒரு புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று இதனை அறிவித்தார்.
'பசுமை முறிகள் செயல்திட்ட அலுவலகம்' என்று குறிப்பிடப்படும் அந்தப் புதிய அலுவலகம், நிதி அமைச்சின் கீழ் செயல்படும். அது வாரியங்களோடு சேர்ந்து செயல்பட்டு பசுமை முறி செயல்திட்டங்களுக்கான ஓர் ஏற்பாட்டை உருவாக்கும்.
தொழில்துறையை ஈடுபடுத்துவதோடு முதலீட்டாளர்களுடன் கூடிய உறவுகளையும் அது நிர்வகிக்கும்.
தேசிய சுற்றுப்புற வாரியம் கடந்த ஆகஸ்ட் மாதம் $3 பில்லியன் பல நாணய நடுத்தரகால பங்கு மற்றும் பசுமை முறி வெளியீடு ஏற்பாட்டை தோற்றுவித்தது.
அந்தப் பங்கு வெளியீடு மூலம் கிடைக்கும் தொகை 'துவாஸ் நெக்சஸ்' போன்ற சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி அளிக்க பயன்படுத்தப்படும்.
சிங்கப்பூரின் கரிம வரி தொடர்பில் நிதி அமைச்சு பரிசீலனைகளை நடத்தி வருவதாகவும் அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இதன் தொடர்பில் புதிய தகவல்கள் இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சிங்கப்பூர் சுற்றுச்சூழல் முதலீடு மற்றும் நிதித்துறை மாநாட்டில் நேற்று அமைச்சர் பேசினார்.
அந்த மாநாடு நேரடியாகவும் இணையம் மூலமாகவும் நடந்தது. பசுமை நிதி சுற்றுச்சூழல் ஏற்பாடுகளை விரிவுபடுத்த பல்வேறு திட்டங்கள் குறித்து சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதில் முதலாவதாக கரிமக் குறைவு வர்த்தகச் சான்றிதழ் சந்தையை மேம்படுத்த சிங்கப்பூர் திட்டமிடுகிறது.
பசுமை முதலீடுகளுக்கான வளங்களையும் தேவைகளையும் பெருக்குவதற்குத் தோதான நீடித்த நிதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கு உந்துசக்தியாக சிங்கப்பூர் செயல்படும். அரசாங்கம் இதில் முன்னின்று வழிகாட்டும் என்றார் அவர்.
இந்த வட்டாரத்தில் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க தனியார் துறை முயற்சிகள் பெரிதும் வரவேற்கப்படுவதாக திரு வோங் கூறினார்.
பசுமை நிதி வளத்திற்கு ஆதரவாக நிதித் துறையில் வலுவான ஆற்றலையும் அனுபவத்தையும் பலப்படுத்துவது, சிங்கப்பூர் ஒருமித்த கவனம் செலுத்தும் மூன்றாவது துறை என்றார் அமைச்சர்.