சிங்கப்பூரின் மத்திய வங்கி தன்னுடைய அக்டோபர் மாத மறுபரிசீலனையின்போது நாணயக் கொள்கையை மாற்றம் இல்லாமல் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கொவிட்-19 டெல்டா கிருமி உள்ளூரிலும் உலகிலும் வேகமாகப் பரவுவதையும் அதனால் பொருளியல் மீட்சிக்கு மிரட்டல் ஏற்படுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் 11 பொருளியல் வல்லுநர்களை உள்ளடக்கி இந்த வாரம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
சிங்கப்பூர் மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையம் அக்டோபர் 14ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னதாக தன்னுடைய நாணயக் கொள்கை மறுபரிசீலனையை நடத்தும்.
நாணய பரிவர்த்தனை அடிப்படையிலான கொள்கைகளில் மாற்றம் எதையும் ஆணையம் செய்யாது என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அந்த வல்லுநர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.
இப்போதைய கொவிட்-19 தொற்று நிலையில் தன்னுடைய நாணயக் கொள்கையை மத்திய வங்கி இன்னும் கடுமையாக்காது என்றே தெரிவதாக 'மூடிஸ்' நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் டெனிஸ் சியோக் கூறுகிறார்.
நாணய பரிவர்த்தனை விகிதங்களின் அடிப்படையில் தன்னுடைய நாணயக் கொள்கைகளை இந்த ஆணையம் நிர்வகித்து வருகிறது.
சிங்கப்பூரின் முக்கியமான வர்த்தக பங்காளி நாடுகளின் நாணயங்களுக்கு எதிரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு உயர அல்லது குறைய அந்தக் கொள்கை அனுமதிக்கிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஆணையம் தன்னுடைய கொள்கையை கடுமையாக்கக்கூடும் என்று ஐந்து பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.