மக்கள் செயல் கட்சியின் முதியோர் பிரிவு ஒரு புதிய செயல்திட்டத்தை நேற்று தொடங்கியது. 500 ஜோடி முதியோரையும் இளையோரையும் ஒன்றுசேர்த்து, அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களையும் ஆசை விருப்பங்களையும் பற்றி கதைகளை எழுதுமாறு செய்வது அந்தச் செயல்திட்டத்தின் நோக்கம்.
'வாழ்வில் முத்திரை பதியுங்கள்' என்ற அந்தச் செயல் திட்டத்தில் சிங்கப்பூரின் மிகப் பிரபலமான திடல்தட நட்சத்திரம் சி. குணாளன், ஜேஸ் இசை வல்லுநர் ஜெரிமி மோன்டெய்ரோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருவாட்டி யூ ஃபூ யீ ஷூன், ஹவாசி டைப்பி, லில்லி நியோ ஆகியோர் சேர்ந்து இருக்கிறார்கள்.
ஐநாவின் அனைத்துலக முதியோர் தினம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1ஆம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக மசெக முதியோர் குழுவும் சமூக அறநிறுவன அமைப்பும் அந்தச் செயல்திட்டத்தைக் கூட்டாகத் தொடங்கின.
இது பற்றி கருத்து தெரிவித்த அந்தச் செயல்திட்டத்தின் ஏற்பாட்டுத் தலைவரும் ஹாலந்து புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எட்வர்ட் சியா, பல தலைமுறைகளுக்கும் உரிய வேறுபட்ட வெவ்வேறான வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான இந்தக் கூட்டு முயற்சிகளின் மூலம் அதிகமான சிங்கப்பூரர்கள் கடந்த காலத்தைப் பெருமையாக நினைத்து நிகழ்காலத்தைப் போற்றி, நம் முதியோர் உள்ளிட்ட பொது எதிர்காலத்தைப் பலப்படுத்துவார்கள் என்பதே நம்பிக்கை என்று தெரிவித்தார்.
"முதியோருக்கும் இளையோருக்கும் இடையில் பல தலை முறை கடந்த உறவுகளைப் பலப்படுத்தி, நமது பன்மயக் கண் ணோட்டம் பற்றிய ஆழமான புரிந்துணர்வைப் பேணி வளர்க்கலாம் என்பதும் நமது நம்பிக்கை," என்று மூத்தோர் குழு துணைத் தலைவரும் கெபுன் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான ஹென்றி குவெக் கூறினார்.
சிங்கப்பூரின் திடல்தட நட்சத்திரமாக ஜொலிக்கும் திரு குணாளன், 78, கீகன் டான் என்ற ஏழு வயது சிறுவனுடன் இந்தத் திட்டத்தில் சேர்ந்து இருக்கிறார்.
இந்தச் சிறுவன் படங்களை வரைந்து ஒரு கதையை எழுதி இருக்கிறார். திரு குணாளனிடம் இருந்து ஆலோசனை பெற்று அரக்கன் ஒருவனை தோற்கடிக்கும் துடிப்புமிக்க கதாநாயகனாக தன்னை உருவகப்பபடுத்தி இந்தச் சிறுவன் அந்தக் கதையை எழுதி இருக்கிறார்.
அந்த 10 பக்க முத்திரை பதியுங்கள் புத்தகத்தில் பாதியை திரு குணாளன் எழுதி இருக்கிறார்.
தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறித்தது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததற்காக போலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது போன்ற தனது சிறு வயது அனுபவங்களை அதில் அவர் தெரிவித்து இருக்கிறார்.
"நான் இந்தச் சிறுவனைப் போல் இருந்தபோது நான் செய்த செயல்களைப் பற்றி இந்தச் சிறுவன் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்," என்றார் திரு குணாளன்.
இதனிடையே, முதிய சிங்கப்பூரர்களும் இளையர்களும் முன்வந்து இந்தத் திட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை இணைய முகவரி மூலம் கலந்துகொள்ளலாம் என்று மசெக முதியோர் குழு வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் தனக்கு முன்பின் தெரியாத ஒருவருடன் ஜோடி சேர்க்கப்படுவர்.
தெரிந்தவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பினால் அதற்கும் வழியுண்டு. ஒவ்வொருவரும் சுமார் இரண்டு வார காலத்தில் தான் சார்ந்த கதையை எழுதவேண்டும்.
வாழ்வில் முத்திரை பதியுங்கள் புத்தகத்தை எழுதி முடித்து அதை நவம்பர் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்.

