'கேஸ்' எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் புதிய தலைவராக மூன்றாண்டு காலத்திற்கு ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மெல்வின் யோங் பொறுப்பேற்று இருக்கிறார்.
இணையம் வழி பொருட்களை வாங்குவோரை இன்னும் சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும்; நியாயமற்ற நடைமுறைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவர் சாதிக்க விரும்பும் அம்சங்களில் உள்ளடங்கும்.
தொடக்கமாக சிகை அலங்காரம், அழகு நிலையம், உடம்புப் பிடி நிலையங்களுடன் கேஸ் அமைப்பு செயல்பட்டு, மனநிறைவற்ற வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய பணத்தைத் திருப்பி பெறுவதற்கு ஐந்து நாள் அவகாசம் அளிக்கும் ஓர் ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தலாம் என்று திரு யோங் நம்புகிறார்.
கேஸ் அமைப்பு முக்கியமான பெரிய இணையச் சந்தை நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வாடிக்கையாளர்கள் சச்சரவுகளைத் தீர்த்து கொள்வதற்கான முறையான ஏற்பாடு ஒன்றை உருவாக்கும்.
இணையக் கருத்தரங்கு ஒன்றுக்கும் அது ஏற்பாடு செய்யும்.
தவணை முறையில் பொருட்களை வாங்கும் பயனீட்டாளர்கள் எதிர்நோக்கக்கூடிய ஆபத்துகள் பற்றி அவர்களிடம் சில்லறை வர்த்தகர்கள் எடுத்துக் கூறுவதை நடைமுறைப்படுத்தும் புதிய சட்டங்கள் தேவை என்று கேஸ் அமைப்பு கோரிக்கை விடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.