அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் நீண்டகால அனுமதி பெற்றோரும் தடுப்பூசி நிலையங்கள், பலதுறை மருந்தகங்களுக்கு முன்னேற்பாடு இல்லாமல் சென்று பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்ததை அடுத்து முதியோர் பலர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சேவைத்துறையில் பணிபுரியும் 68 வயது திருவாட்டி சூசன் சியோங், அதிகரித்துவரும் நோய்த்தொற்று சம்பவங்களால் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்பினாலும் முன்னேற்பாடுகள் செய்ய இயலவில்லை என்று கூறினார். ஆனால், புதிய வசதியினால் நேற்று காலையில் அவர் பீஷான் தடுப்பூசி நிலையத்துக்குச் சென்று பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகக் கூறினார்.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள செங்காங் தடுப்பூசி நிலையத்துக்கு நேற்று சென்ற மூத்தோரில் ஏறத்தாழ 30 விழுக்காட்டினர் முன்னேற்பாடுகள் செய்துகொள்ளாதவர்கள் என சுகாதார மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த திரு எல்வின் இங் குறிப்பிட்டார். இந்த புதிய ஏற்பாடு மூத்தோரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்ற வாரத்திலிருந்தே மூத்தோர் முன்னேற்பாடுகள் இன்றி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கின்றனர். இச்சேவை, பொது சுகாதார தயார்நிலை மருந்தகங்களிலும் வழங்கப்படும்.
பூஸ்டர் தடுப்பூசிக்குத் தகுதிபெற மூத்தோர் தங்களது இரண்டாம் தடுப்பூசியைக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே போட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஏப்ரல் 1 அல்லது அதற்கு முன்பு இரண்டாம் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் தங்களது மூன்றாம் தடுப்பூசிகளை முன்னேற்பாடுகள் இன்றி போட்டுக்கொள்ளலாம். மற்றவர்கள் பூஸ்டர் தடுப்பூசிக்குத் தகுதி பெற இரண்டாம் தடுப்பூசி போட்டு குறைந்தது ஆறு மாத காலமாவது காத்திருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட 500,000 மூத்தோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது. இவர்களுள் 215,729 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் 119,000 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்னேற்பாடுகள் செய்துள்ளதாகவும் அமைச்சு கூறியது. இதற்குத் தகுதி பெறும் அனைத்து மூத்தோரையும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள குடும்பத்தில் உள்ள மூத்தோரை குடும்ப உறுப்பினர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

