சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக நேற்று முன்தினம் இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் பெண்கள். ஒருவருக்கு வயது 79, மற்றொருவருக்கு வயது 87.
அவ்விருவரும் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தொடர்ந்து 11வது நாளாக கொவிட்-19 உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.
வியாழக்கிழமை அன்று புதிதாக 2,478 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 2,022 தொற்றுப் பதிவுகள் சமூக அளவிலானவை.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் 452 பேர்க்கு கிருமித் தொற்று பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இந்த நான்கு பேருக்கும் சிங்கப்பூர் வந்து இறங்கியதும் தனிமை உத்தரவு அளிக்கப்பட்டிருந்தது.
சமூக அளவில் பதிவானவற்றில் 535 பேர் 60 வயதைத் தாண்டியவர்கள்.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1,360 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் 25 பேர் அதிகம். இவர்களில் 204 பேருக்கு உயிர்வாயு தேவைப்படுகிறது. 34 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோரில் 197 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
இப்போது கொவிட்-19 நோயாளிகள் 1,325 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 209 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது; 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோரில் 201 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96,521 ஆகியுள்ளது.
புதிதாக 2,478 பேர் பாதிப்பு