சைக்கிள்களுக்குப் பதிவு தேவையில்லை; ஒரு வரிசையில் ஐந்து சைக்கிள்கள் வரை செல்லலாம்
சாலையில் சைக்கிளோட்டுதல் தொடர்பான விதிமுறைகளை ஆராயும் குழு தனது பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சாலையில் செல்லும்போது அதிகபட்சமாக ஐந்து சைக்கிள்கள் ஒரே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.
"அப்படி அந்த சைக்கிள் குழு மெதுவாக செல்வது என்றால் அது ஒரு பேருந்தின் நீள அளவில் இருக்க வேண்டும்," என்று 'ஏஎம் ஏபி' எனும் உந்து நடமாட்ட ஆலோசனைக் குழு தெரிவித்தது.
இதுபோன்ற மேலும் பல பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நேற்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களுக்காக தற்சமயம் சைக்கிளுக்கு பதிவோ உரிமமோ தேவைப்படாது என்றும் குழு சொன்னது.
"சைக்கிள் பதிவு, உரிமம் போன்றவை சைக்கிளோட்டுவதை ஒரு பொழுதுபோக்காக கொண்டுள்ளவர்கள் அந்தப் பழக்கத்தை மேற்கொள்ளாமல் போகச் செய்யலாம். மேலும் வேலைக்கு சைக்கிளில் செல்லும் மூத்தோர், தனிநபர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
"மற்ற நாடுகளின் வழக்கங்களை வைத்துப் பார்க்கும்போது, இப்படிப்பட்ட விதிமுறைகள் கண்மூடித்தனமாக சைக்கிளோட்டுதலைக் குறைத்துவிடவில்லை அல்லது சாலைப் பாதுகாப்பை மேம்படுத்திவிடவில்லை," என்றும் ஆலோசனைக் குழு விவரித்தது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடங்கள் உள்ள சாலையில் சைக்கிளோட்டிகள் இருவர் இருவராகச் செல்லலாம் என்று பரிந்துரைக்கும் 'ஏஎம்ஏபி' குழு, அது சாலையில் செல்வோர் அவர்களைத் தெளிவாகப் பார்க்க வழிவகுப்பதுடன் அது அதிக பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என்று கூறியது.
மேலும் சாலை விதிமுறைகள் தொகுப்பு புத்தகத்திலும் வாகனமோட்டும் தேர்வுப் புத்தகத்திலும், சைக்கிளோட்டிகள் பற்றிய இந்தப் புதிய விதிமுறைகள் உள்ளடக்கப்படும்.
அதில் சாலைகளில் செல்லும் வாகனமோட்டிகளுக்கும் சைக்கிளோட்டிகளுக்கும் குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படும்.
இந்த விதிமுறை முக்கியமானது. காரணம், சாலைகளைப் பயன்படுத்தும் சைக்கிளோட்டிகளுக்கு விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. தனது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட குழு, அவ்வாறு அமல்படுத்தப்படுவதற்கு முன் இது தொடர்பான பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளும் அவசியம் என்றது.
"சைக்கிளோட்டிகள் பொதுவாக சாலை விதிகளைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பதால், சைக்கிளோட்டிகளுக்கு எதிராக செயல்படுபவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்வது அனைவரின் பொறுப்பு," என்றும் 'ஏஎம்ஏபி' குழு தனது அறிக்கையில் தெரிவித்தது.
இது குறித்து தமது ஃபேஸ்புக்கில் கருத்துரைத்த போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், "இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் ஆராய்ந்து தனது முடிவைத் தெரிவிக்கும்.
"இப்போது சாலைகளைப் பயன்படுத்தும் சைக்கிளோட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், பரிந்துரைகள் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் உள்ளனவா என்பது ஆராயப்படும்," என்று கூறினார்.