'மைஸ்' எனப்படும் கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள் துறையில் உள்ள வட்டாரத் தலைவர்கள் ஆண்டுதோறும் கலந்துகொள்ளவிருக்கும் புதிய ஆண்டு உச்சநிலைக் கூட்டத்தை சிங்கப்பூர் அடுத்த மூன்று ஆண்டு களுக்கு ஏற்று நடத்தும்.
ஆசியா தலைமை நிர்வாகிகள் உச்சநிலைக் கூட்டம் எனப்படும் அந்தக் கூட்டம் முதன்முறையாக அடுத்த ஆண்டு தி ஃபுல்லர்ட்டன் ஹோட்டலில் நடைபெறும். அதில் 150 வர்த்தகத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இவர்களில் பாதி பேர் ஆசியாவிலிருந்தும் மற்றவர்கள் அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்தும் வருவார்கள்.
ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் உள்ள 'மைஸ்' துறையில் சென்ற 2017ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 230 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டப்பட்டதாக 'இலிட் மாரக்கெட் ரிசரச்' எனும் ஆய்வு நிறு வனம் கூறியுள்ளது.
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் அந்த வருவாய் 440 பில்லியன் டாலருக்கு மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநிலைக் கூட்டத்தை ஏற்று நடத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 'சேக்காஸ்' எனப்படும் சிங்கப்பூர் மாநாட்டுக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் சங்கத்துடனும் அனைத்துலக 'மைஸ்' துறை அமைப்புகளுடனும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று கையெழுத்திட்டது.
நிகழ்ச்சியில் வர்த்தக தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் கலந்துகொண்டார்.
இவ்வேளையில் 'கேஸ்டெக்' எனப்படும் எரிசக்தித் துறை மாநாட்டை வரும் 2023ல் இங்கு நடத்துவதன் தொடர்பில் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்புடனும் 'டீஎம்ஜி இவெண்ட்ஸ்' எனும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.