அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தி மலேசியக் கும்பல் ஒன்று சிங்கப்பூர் வழி போதைப்பொருளைக் கடத்தியிருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இக்கும்பல் இவ்வாறு செயல்பட்டு வந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் முதல் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கும்பலைக் கண்காணித்து வந்துள்ளது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அளித்த தகவல்களைக் கொண்டு அரச மலேசிய போலிஸ் பிரிவைச் சேர்ந்த போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவு ஐந்து மலேசியர்களைச் சென்ற மாதம் 24ஆம் தேதிக்கும் 28ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கைதுசெய்தது.
குற்றம் புரிந்த கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. கைதானோரில் நால்வர் பெண்கள், ஒருவர் ஆண்.
21 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், கோலாலம்பூர், சிலாங்கூர் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 1.6 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 55 கிலோகிராம் எடைகொண்ட போதைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
போதைப்பொருள் தயாரிக்கும் கருவிகள், போதைப்பொருள் தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 2.2 கிலோ கிராம் எடைகொண்ட 'கெஃபெயின்'னையும் அதிகாரிகள் கண்டெடுத்தனர். மொத்தம் சுமார் 240,000 ரிங்கிட் மதிப்புள்ள மூன்று வாகனங்களையும் 11 வங்கிக் கணக்குகளிலிருந்து 426,000 ரிங்கிட் பணத்தையும் பறிமுதல் செய்ததாக அரச மலேசிய போலிஸ் பிரிவின் போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவு அந்நாட்டில் நடைெபற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.
கைதான ஐவர் போதைப்பொருள்களை விநியோகம் செய்தவர்கள் மட்டுமே என்றும் கடத்தல் நடவடிக்கைகளின் தலைவர் இன்னும் பிடிபடவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். கைதான ஒருவர் மீது மலேசியாவில் நேற்று குற்றச்சாட்டு சுமத்த திட்டமிடப்பட்டிருந்தது.