கி.ஜனார்த்தனன்
சிங்கப்பூர் இரண்டாவது ஆண்டாக கிருமிப் பரவலுக்கிடையே தீபாவளியைக் கொண்டும் தருணத்தில் ஒட்டுமொத்த சமூகமே ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டாட்ட உணர்வைக் கட்டிக்காக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
"கிருமிப் பரவல் சூழலால் தீபாவளியை எப்போதும்போல கொண்டாட இயலாவிட்டாலும் அதற்குப் பின்னால் இருக்கும் தீபாவளி உணர்வைக் கட்டிக்காக்க முயற்சி செய்யவேண்டும். இருளை நீக்கி ஒளியை உண்டாக்குவது என்பதே தீபாவளிக்குரிய அடிப்படை கொண்டாட்ட உணர்வு," என்று திரு ஈஸ்வரன், நேற்று பிற்பகல் இரண்டு மணி வாக்கில் தேக்கா மாலிலுள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
என்டியூசி ஃபேர்பிரைசின் அறப்பணிப் பிரிவான ஃபேர்பிரைஸ் அறநிறுவனம், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கு 20,000 வெள்ளி வழங்கும் நிகழ்ச்சி, அந்தப் பேரங்காடியில் நடைபெற்றது.
ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சியா கியன் பெங், சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரனிடம் காசோலை திரு ஈஸ்வரனின் முன்னிலையில் வழங்கினார்.
"தீமையை நன்மை வென்றதைக் கொண்டாடும் தீபாவளியை, கிருமிப் பரவலை வெல்வதற்குத் தேவையான சமுதாய ஒற்றுமையை வளர்க்க நாம் பயன்படுத்த வேண்டும். பல்வேறு சூழல்கள் காரணமாக சமுதாயத்தில் மன உளைச்சலால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
குடும்பத்தினர், பணியாளர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவித பாதிப்பு இருக்கலாம். இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி, தைரியம் அளித்து கொண்டாட்ட உணர்வில் இவர்களையும் இணைத்துக்கொண்டால் தீபாவளி உணர்வை அது பிரதிபலிக்கும்," என்று கூறினார்.
விழா நேரங்களில் சமூகப் பங்காளிகள் அனைவரும் ஒன்றுகூடி உதவுவது முக்கியம் என்று சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்தார்.
"தனிமனிதர்கள் முதல் என்டியூசி போன்ற பெருநிறுவனங்கள் வரை அனைவரது பங்களிப்பும் சிங்கப்பூரின் தனித்தன்மையைக் காட்டுகிறது. சிரமத்தில் இருக்கும் மக்கள், மனம் தளர வேண்டாம் என்பதைத் தெரிவிப்பதே இது போன்ற கூட்டுமுயற்சிகளின் நோக்கம். இது என்றும் தொடர்வது முக்கியம்," என்று திரு அன்பரசு கூறினார்.
ஆண்டுதோறும் சுமார் $2 மில்லியன் நிதியுதவியை மக்களுக்கு அளித்துவரும் சிண்டா, தற்போதையை கிருமிப் பரவல் காரணமாக, கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் $5.5 மில்லியன் நிதியுதவி மக்களுக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சுமார் 1,900 குடும்பங்களுக்குப் பயனளிக்கும் சிண்டாவின் விழாக்கால அன்பளிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு என்டியுசி வழங்கிய தொகை பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
2011ஆம் ஆண்டு முதல் ஃபேர்பிரைசஸ் அறநிறுவனம், இவ்வாண்டின் தொகை உட்பட மொத்தம் 280,000 வெள்ளிக்கும் அதிமான நிதியை சிண்டாவுக்கு அளித்துள்ளது.
சிண்டாவிடமிருந்து சமூக மற்றும் நிதியுதவி பெற்றுவரும் பிள்ளைகளுக்கு இந்த நன்கொடை பயனளிக்கும். 2008ஆம் ஆண்டில்தொடங்கப்பட்ட அந்த அறநிறுவனம், இதுவரை சமூகத்திற்கு 158 மில்லியன் வெள்ளி நிதியுதவியை அளித்ததுடன் பல்வேறு சமூக நலப் பணிகளையும் நடத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு நிறைவான தீபாவளி அனுபவத்தை வழங்குவதற்காகவே பேரங்காடி, தனது பொருட்களுக்கான தெரிவுகளை விரிவுப்படுத்தியிருப்பதாக என்டியுசி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சியா கியன் பெங் தெரிவித்தார்.
"தேக்கா பிளேசில் உள்ள இந்தப் பேரங்காடியில் நாங்கள் இந்தியர்கள் பயன்படுத்தும் பொருட்களை அதிகம் தருவித்துள்ளோம். அத்துடன், அறிவிப்புப் பலகைகளில் தமிழைப் பயன்படுத்தியுள்ளோம்.
இந்தியா, மலேசியா, இந்தோனீசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பொருட்கள் தருவிக்கப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார்.
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்ததால் பல்வேறு ஆரோக்கியமான பலகாரங்கள் தருவிக்கப்பட்டிருப்பதாக திரு சியா கூறினார். தேக்கா பிளேசில் மட்டுமின்றி சிங்கப்பூரிலுள்ள பெரிய என்டியுசி கிளைகளில் இந்தப் பொருட்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.