'சிறந்த பலன்களைப் பெறும் வகையில் பொதுச் சுகாதாரத்தில் முதலீடு செய்க'

2 mins read
2eeb1a95-f3ad-45e5-8a93-c6f8fa18598f
-

வருங்­கா­லத்­தில் கொள்­ளை­நோயை எதிர்­கொள்ள வளங்­களைத் தேவை­யான அள­வுக்கு சேமித்து வைப்­பது, பொதுச் சுகா­தா­ரத்­தில் சிறந்த பலன்­க­ளைப் பெறும் வகை­யில் முத­லீ­டு­களைச் செய்­வது போன்ற நோய் காப்பு நட­வ­டிக்­கை­களை எடுப்­பது அவ­சி­யம் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் (படம்) வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இதன்­படி, எதிர்­கால சுகா­தார நெருக்­கடி நிலையைச் சமா­ளிக்க வட்­டார மற்­றும் பல நாடு­கள் கொண்ட பல்­ல­டுக்கு அமைப்­பின் அடிப்­ப­டை­யில், அபா­யங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வது, தக­வல்­களை பரி­மா­றிக்­கொள்­வது போன்ற மேம்­பட்ட கட்­ட­மைப்­பு­களை வளர்க்க வேண்­டும் என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

ஆசி­யான் மின்­னி­லக்க பொதுச் சுகா­தா­ரம் என்ற கருப்­பொ­ரு­ளில் சிறப்பு அமைச்­சர்­கள் மாநாடு புதன்­கி­ழ­மை­யும் நேற்று வியா­ழக்­கிழமையும் மெய்­நி­க­ராக நடை­பெற்­றது. அதில் பங்­கேற்ற திரு லாரன்ஸ் வோங் மேற்­கண்­ட­வாறு பேசி­னார்.

வலு­வான கண்­கா­ணிப்புக் கட்­ட­மைப்பு, பல நாடு­கள் பங்­கு­கொள்­ளும் நாணய பரி­மாற்ற ஏற்­பா­டு­கள் போன்­ற­வற்­றால் 1997ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆசிய நிதி நெருக்­கடி சமா­ளிக்­கப்­பட்­டது என்­பதை திரு லாரன்ஸ் வோங் தமது உரை­யில் நினை­வு­கூர்ந்­தார்.

"அது­போல், பொதுச் சுகா­தார நெருக்­கடி நிலை­க­ளை­யும் அவ­சர நிலை­க­ளை­யும் எதிர்­கொள்ள நாம் மேம்­பட்ட கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்க வேண்­டும்.

"இதை எளி­மை­யாக சொல்ல வேண்­டும் என்­றால், மேம்­பட்ட தக­வல் பரி­மாற்­றம், வளங்­களை, இடர்­பா­டு­களைப் பகிர்ந்­து­கொள்­ளும் திட்­டங்­கள் இதில் அடங்­கும்," என்று அவர் கூறி­னார்.

கொள்­ளை­நோ­யால் விநி­யோ­கச் சங்­கிலி தடைப்­பட்டு, உலக சந்தை வர்த்­த­கம் மீது நம்­பிக்கை இழந்த சூழல் ஏற்­பட்­ட­தால், இனி எல்­லா­வற்­றை­யும் ஒரு நாடு தனது எல்­லை­க­ளுக்கு உள்­ளேயே செய்ய வேண்­டும் என்று எண்­ணக்­கூ­டாது என்­றும் அவர் நினை­வூட்­டி­னார்.

உயர்ந்து வரும் சுகா­தாரப் பரா­ம­ரிப்புச் செல­வி­னத்­தால் அதற்கு நிதி ஒதுக்­கு­வது உலக நாடு­க­ளின் அனைத்து நிதி அமைச்­சர்­க­ளுக்­கும் பெரிய கவலை என்­பதை திரு வோங் ஒப்­புக்­கொண்­டார்.

இதில் அனை­வ­ருக்­கும் கிடைக்­கக்­கூ­டிய சுகா­தாரப் பரா­ம­ரிப்பு சேவை, அதை உயர் தரத்­தில் குறைந்த செல­வில் வழங்­கு­வது என மூன்று இக்­கட்­டான அம்­சங்­கள் அடங்­கி­யுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரில் சுகா­தாரப் பரா­மரிப்புத் தனி­ந­பர்­களும் ஒட்­டு­மொத்த சமூ­க­மும் பொறுப்­பேற்­கும் ஒன்­றாக இருக்க வேண்டும் என்­பதை தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றோம். அது நாட்­டின் பொறுப்பு மட்­டு­மல்ல," என்று அவர் விவ­ரித்­தார். கொவிட்-19 கொள்­ளை­நோய் கற்­றுத்­தந்த மூன்று பாடங்­க­ளை­யும் அவர் பட்­டி­ய­லிட்­டார்.

முத­லா­வ­தாக, செல­வி­னம், கழிவு­களை மிச்­சப்­ப­டுத்தி, பொதுச் சுகா­தார நெருக்­கடி நிலையை சமா­ளிக்க சுகா­தாரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் வளங்­களை சேமித்து வைப்­பது.

இரண்­டா­வ­தாக, குறை­வான வளங்­களை பாது­காப்­பாக வைத்து அடிப்­படை சுகா­தா­ரத்தை மேம்­படுத்து­வது. இத­னால் அனை­வ­ருக்­கும் தீவிர சிகிச்சை அளிக்க வேண்­டி­ய­தில்லை. மூன்­றா­வ­தாக, சுகா­தார செல­வி­னத்­தைப் பொறுத்­த­மட்­டில், பலன்­க­ளைப் பெறக்­கூ­டிய வகை­யில் முத­லீடு செய்­வது என்று அவர் கூறி­னார்.