தவறான முறையில் தனது வங்கிக் கணக்குகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெற்ற ஏனி ஃபூங் வழக்கில் மேலும் சில விவரங்கள் தெரியவந்துள்ளன. இவர் 2016ஆம் ஆண்டு இணையத்தில் தெரிந்துகொண்ட ஆடவரிடமிருந்து சுமார் 3,800 வெள்ளியை மட்டுமே பெற்றிருக்கிறார். பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் என்றும் தனது பெயர் ஸ்டீவ் வில்லியம்ஸ் என்றும் அந்த ஆடவர் அடையாளப்படுத்திக்கொண்டார்.
ஏமாற்றப்பட்ட மற்ற சிலர் ஃபூங்கின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பியது நீதிமன்ற ஆவணங்களில் தெரியவந்தது. அவர்களில் மூவர் சிங்கப்பூரில் இருப்பவர்கள். 2016ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் 200,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை ஃபூங்கின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியிருக்கின்றனர்.
ஏமாற்றப்பட்ட முதல் நபரான 59 வயது ஆடவர் 2016ஆம் ஆண்டு அக்டோபர் ஃபூங்கின் கணக்கிற்கு 95,000 வெள்ளியை அனுப்பியிருக்கிறார்.
ஏமாற்றப்பட்ட மற்றொருவர் ஒரு 48 வயது பெண். ஃபூங்கிற்குச் சொந்தமான இன்னொரு வங்கிக் கணக்கிற்கு 34,500 வெள்ளியை அனுப்பினார்.
ஏமாற்றப்பட்ட மூன்றாவது நபர் ஓர் 69 வயது ஆடவர். அவர் 100,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை ஃபூங்கிற்கு அனுப்பியிருக்கிறார். தவறாக சிலரை நம்பியதால் மூவரும் பணம் கொடுக்க நேரிட்டது.
இவர்களைத் தவிர பொத்ஸ்வானா நாட்டில் இருக்கும் வங்கி ஒன்றும் ஏமாற்றப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்களால் தனது கட்டமைப்பு ஊடுருவப்பட்டதாகவும் தன்னிடமிருந்து 445,500 வெள்ளித் தொகை ஃபூங்கின் வங்கிக் கணக்குகளில் ஒன்றுக்கு மாற்றப்பட்டதாகவும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த வங்கி சிங்கப்பூர் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவுக்குத் தகவல் தெரிவித்தது.
தவறாக வந்த சுமார் 690,000 வெள்ளித் தொகையைத் தனக்கும் தனது மகளுக்கும் சொந்தமான வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொண்டதன் தொடர்பில் ஏழு குற்றச்சாட்டுகளை ஃபூங் ஒப்புக்கொண்டார். தவறாக வந்த எஞ்சிய தொகை தொடர்பில் உள்ள மேலும் 38 குற்றச்சாட்டுகள் தீர்ப்பளிக்கும்போது கருத்தில் கொள்ளப்படும். ஃபூங்கிற்கு அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்படும்.