சிங்கப்பூரில் தாய்மார், சிறார் சுகாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவதற்காக புதிய ஆய்வுக் கழகம் ஒன்று திறந்துள்ளது. நோயாளி பராமரிப்புடன் பெண்கள் மற்றும் சிறார்கள் தொடர்பான முக்கிய விவகாரங்களைக் கையாள்வதற்குப் புத்தாக்க, மின்னிலக்கத் தீர்வுகள் குறித்து ஆய்வுக் கழகம் ஆராயும்.
இனப்பெருக்கம், வளர்சிதை மாற்றம், மனநலன், அறிவாற்றல் வளர்ச்சி, புற்றுநோய் மற்றும் முக்கியமான நோய்களைக் குணப்படுத்துவது போன்ற அம்சங்கள் தொடர்பில் தீர்வுகள் காண்பதைக் கழகம் தன் இலக்காகக் கொண்டுள்ளது.
இதற்காக சிங்ஹெல்த் டியூக் - என்யுஎசின் 'தாய்மார், சிறார் சுகாதார ஆய்வுக் கழகம் (எம்சிஎச்ஆர்ஐ), கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் நிபுணத்துவத்தை நாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பல ஆய்வாளர்களை வரிசையாக உருவாக்குவதுடன் முக்கிய கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆய்வுக் கழகம் முனைந்திடும்.
ஆய்வுக் கழகத்தின் தொடக்க விழா கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அதில் கலந்துகொண்டார்.
உள்ளூர் ஆராய்ச்சித் தகவல்களைத் தாக்கம் மிகுந்த குறுக்கீட்டுத் திட்டங்களாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டினார்.
"தாய்-பிள்ளை இணைக்கு ஒட்டுமொத்த ஆதரவு வழங்குவதற்காக ஓர் ஒருங்கிணைந்த சூழல் அமைப்பை எம்சிஎச்ஆர்்ஐ வலுப்படுத்தி உருவாக்கித் தரலாம்.
"ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், பயிற்சியாளர்கள், சேவை வழங்குநர்கள் ஆகியோரைக் கொண்ட ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்கும் பணியை மேற்கொள்ளும் தகுதியை எம்சிஎச்ஆர்ஐ பெற்றுள்ளது. இதனால் ஆய்வில் கண்டறிந்ததைத் தாய், பிள்ளை ஆகியோருக்காக நேரடியாக நடைமுறைப்படுத்த முடியும்," என்றார் திரு மசகோஸ்.
ஒரு தேசமாக மனிதனின் ஆற்றலை அதிகப்படுத்தவும் மேலும் மீள்திறன் மிக்க ஒரு சமூகத்தை உருவாக்கவும் ஆய்வுக் கழகம் கைகொடுக்கும் என்றார் கழகத்தின் இயக்குநர் இணைப் பேராசிரியர் இங் கீ சோங். இத்தாலியின் 'மெனாரினி பயோமார்க்கஸ் சிங்கப்பூர்' (எம்பிஎஸ்) பிரிவு, எம்சிஎச்ஆர்ஐ கூட்டணியில் ஆசிய மையம் ஒன்றும் அமைக்கப்படும். சுகாதாரப் பராமரிப்புத் துறையின் உயிர்தொழில்நுட்பம், பரிசோதனை அம்சங்கள் தொடர்பில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சியில் இம்மையம் கவனம் செலுத்தும்.

