வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியம், பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்கு இல்லாத காரணத்தால் உள்ளூரிலேயே சுற்றுப்பயணியாக மாறத் தயாராகிவிட்டனர்.
உள்ளூர் சுற்றுலாக்களுக்கான முன்பதிவு, ஆண்டின் முற்பாதியில் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி கண்டது. கொவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்ட உயர் எச்சரிக்கை காலகட்டத்துக்கு முன்னதாக ஏப்ரல் மாதத்தில் உள்ளூர் சுற்றுலாக்களுக்கான முன்பதிவு எண்ணிக்கை 54,200. மார்ச் மாதத்தில் இருந்த 35,200 முன்பதிவுகளைக் காட்டிலும் இது 54% அதிகமாகும்.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் 17,100 முன்பதிவுகளும் பிப்ரவரி மாதத்தில் 22,700 முன்பதிவுகளும் உள்ளூர் சுற்றுலாக்களுக்குச் செய்யப்பட்டன. ஏறுமுகமாகவே அடுத்தடுத்து மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்திருந்தது.
கடந்த ஆண்டு பள்ளி விடுமுறைக் காலமான டிசம்பர் மாதத்தில் 48,600 முன்பதிவுகள் செய்யப்பட்டன. இது நவம்பர் மாதத்தைக் காட்டிலும் 350% அதிகமாகும். நவம்பர் மாதத்தில்தான் சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்றுச்சீட்டுத் (எஸ்ஆர்வி) திட்டம் அறிவிக்கப்பட்டது. $100 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள், 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் வழங்கப்பட்டன. உள்ளூர் ஹோட்டல்களில் தங்குவது, சுற்றுப்பயணத் தலங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்குவது, உள்ளூர் சுற்றுலாக்கள் மேற்கொள்வது போன்றவற்றுக்காக பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இது உள்ளூர் சுற்றுப்பயணங்களை ஊக்குவிக்கும் பொருட்டு அமைந்த ஒரு திட்டம்.
'எஸ்ஆர்வி' திட்டத்தால் சுற்றுலாக்களின் தேவை அதிகரித்துள்ள அதே வேளையில், உள்ளூர்வாசிகளின் ரசனைக்கு ஏற்ப புத்தாக்க அணுகுமுறைகளைக் கையாளும் சுற்றுலா நிறுவனங்களின் முயற்சிகளும் வீண்போகவில்லை.
சாலையிலும் நீரிலும் செல்லக்கூடிய படகு வாகனங்களைக் கொண்ட 'பிக் பஸ் & டக்டுவர்ஸ்' நிறுவனம், அதன் அணுகுமுறையை மாற்ற வேண்டியிருந்ததாகத் தெரிவித்தது. ஒரு மணிநேரத்திற்கு சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களை உள்ளூர்வாசிகள் கண்டு ரசிக்கும் வகையில் அதன் சுற்றுலாவை மாற்றி அமைத்ததாக நிறுவனம் குறிப்பிட்டது.