வேலை இடத்தில் நிகழும் மரணங்களுக்கு வாகன விபத்துகளே முதல் காரணம் என்று தெரிய வந்துள்ளது. மனிதவள அமைச்சு வேலையிடப் பாதுகாப்பு குறித்து நேற்று வெளியிட்ட அரையாண்டு புள்ளி விவரங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
ஜனவரிக்கும் ஜூனுக்கும் இடைப்பட்ட காலத்தில் 23 ஊழியர்கள் பணிபுரிந்துகொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளனர். அவற்றுள் ஆறு சம்பவங்கள் வாகன விபத்துகள்.
உயிரிழந்தோரில் நால்வர் விநியோக ஊழியர்கள். இவர்களுள் மூவர் மற்ற ஓட்டுநர்களின் கவனக் குறைவால் மாண்டனர்.
இத்தகைய மரணங்களைக் குறைக்கும் நோக்கத்தில், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றம், தேசிய விநியோக தன்னுரிமை தொழிலாளர்கள் சங்கம், கிராப், சிங்போஸ்ட் போன்ற நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பணிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
வாகன விபத்து எச்சரிக்கை முறை, இரு சக்கர வண்டி ஓட்டுநர் கண்காணிப்பு முறை, போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப தீர்வுகள் முன்னோடித் திட்டமாக விநியோக நிறுவனங்களிடையே தொடங்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இரண்டு மாதக் காலத்துக்கு வாகன பாதுகாப்பு பற்றிய அமலாக்க நடவடிக்கை இம்மாதத்திலிருந்து நடத்தப்படும்.
இவை, போக்குவரத்துச் சேவைச் துறை, சரக்கு சேமிப்புத் துறை, கட்டுமானத்துறை உற்பத்தித்துறை போன்ற போக்குவரத்து ஆபத்து அதிகம் கொண்ட துறைகளைக் குறி வைக்கும்.
இவ்வாண்டின் முதற்பகுதியில் நிகழ்ந்த வேலையிட மரணங்களில் 60% போக்குவரத்துச் சேவைத் துறையையும் கட்டுமானத்துறையையும் சேர்ந்தவை.
துவாஸ் வெடிப்பில் மாண்ட மூவரையும் சேர்த்து உற்பத்தித் துறையில் நான்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாண்டு இதுவரை குறைந்தது 30 பேராவது வேலை இடத்தில் மாண்டுள்ளனர். மனித வள அமைச்சு உற்பத்தித்துறையைக் கூர்ந்து கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. உயிர் சேதம் ஏற்படாத விபத்துகளில் அதிகமானவை இத்துறையிலேயே நிகழ்ந்துள்ளன. வேலை இடத்தில் காயம் ஏற்படுத்திய சம்பவங்கள் இவ்வாண்டின் முதற்பகுதியில் மட்டும் 6,411 நிகழ்ந்துள்ளன.