செல்லப்பிராணிகள் நலனை மேம்படுத்தும் பொருட்டு செல்லப்பிராணிகளை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்வோருக்கான உரிமம் பெறுவதில் பெரிய மாற்றம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து இந்தப் புதிய மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, செல்லப்பிராணிகளை விற்பதற்காக வளர்ப்போர், நாள்தோறும் செல்லப்பிராணிகள் மற்றும் அவற்றின் குட்டிகள் ஆகியவற்றின் உடல்நிலையைப் பரிசோதனை செய்யவேண்டும்.
அத்துடன் அவர்கள் தாங்கள் விற்பனைக்காக வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்குச் சமூகத் தொடர்பு, உடற்பயிற்சி போன்றவற்றுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரவேண்டும். மேலும் தடுப்பூசி, ஆண்டு சுகாதாரப் பரிசோதனைகள், சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கான சான்றுகளைப் பராமரிக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்யும் நாய்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடவேண்டும். அத்துடன் அவற்றுக்கு ஆறு வயதாகும்போது ஓய்வுபெற வேண்டும். இனப்பெருக்கம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நாய்கள் அதன் ஓய்வு வயதை எட்டும்போது, அவை பிராணிகள் வளர்க்குமிடத்தில் இருந்தாலும் வீடுகளில் எடுத்து வளர்க்கப்பட்டாலும் கண்டிப்பாக அவற்றுக்கு கருத்தடை செய்திருக்கவேண்டும் என்று விலங்குநல மருத்துவச் சேவை பிரிவு (ஏவிஎஸ்) தெரிவித்தது.

