சிங்கப்பூரில் இன்னும் மூன்று முதல் ஆறுமாத காலத்தில் புதிய வாழ்க்கை வழமை ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
இப்போது அன்றாடம் தொற்று கூடிவருகிறது. இந்த நிலையில் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முயலும் ஒரு காலகட்டத்தில் சிங்கப்பூர் நுழைவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சுகாதாரப் பராமரிப்பு முறை தொடர்ந்து நெருக்குதலில் இருந்து வருகிறது என்றும் டெல்டா கிருமி பரவுவது மெதுவடைந்து இருக்கிறது என்றாலும் பரவல் இன்னமும் நிற்கவில்லை என்றும் திரு லீ கூறினார்.
ஒவ்வொரு நாளும் சிங்கப்பூர் வலுவடைந்து வருவதாகவும் அதனுடைய மீள்திறன் அதிகரித்து வருவதாகவும் கொரோனா கிருமியுடன் வாழ்வதற்கு நாடு ஆயத்தமாகி வருவதாகவும் குறிப்பிட்ட பிரதமர், வாழ்வில் இந்தப் புதிய வழமை அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்டுவிடும் என்றார்.
கொவிட்-19 சூழ்நிலை பற்றி நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு லீ நேற்று உரையாற்றினார்.
கூடிவரும் தொற்று ஒரு கட்டத்தை எட்டி பிறகு குறையத் தொடங்கும் என்றும் இது ஒரு மாத காலத்தில் இடம்பெறும் என்று நம்பப்படுவதாகவும் தெரிவித்த திரு லீ, இதன் விளைவாக சுகாதாரப் பராமரிப்பு முறைக்கான சுமை குறையும்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்றார்.
இருந்தாலும் புதிய தொற்று அலை ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் மிகவும் கவனமாகவே இதைச் செய்யவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொற்றில் இருந்து பாதுகாப்பாக மீண்டு வரவேண்டும் என்றால் நாம் நம்முடைய சுகாதாரப் பராமரிப்பு முறையையும் ஊழியர்களையும் என்ன விலை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்று திரு லீ வலியுறுத்திக் கூறினார்.
சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களையும் அந்த முறையையும் பாதுகாக்க அரசாங்கம் ஆன அனைத்தையும் செய்து வருவதாகக் குறிப்பிட்ட திரு லீ, சிங்கப்பூரர்களின் சார்பில் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சிங்கப்பூரர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொண்டு மருத்துவமனைகளையும் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களையும் பாதுகாக்க உதவ வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தேவை என்று வலியுறுத்திக் கூறிய பிரதமர் திரு லீ, கொரோனா கிருமித்தொற்றில் இருந்து விரைவில் விடுபட்டுவிடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.