தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத்தடத் திட்டம் விரிவாக்கம்
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மேலும் ஒன்பது நாடுகளுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி சென்று வரலாம்.
கொவிட்-19 சூழலில் எல்லைகளை மீண்டும் திறந்துவிடுவதில் சிங்கப்பூர் முன்னெடுத்துள்ள மிகப்பெரிய நடவடிக்கை இது.
இம்மாதம் 19ஆம் தேதி முதல், கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் சென்று வரலாம்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு செய்தியாளர்களை நேற்று சந்தித்தபோது, போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான இந்தப் பயணத்தடத் திட்டம் (விடிஎல்) நவம்பர் 15 முதல் தென்கொரியாவிற்கு நீட்டிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
உலகளாவிய தொடர்புடன் கூடிய அனைத்துலக விமானப் போக்குவரத்து மையம் என்ற சிங்கப்பூரின் நிலையை மீட்டெடுத்து, மீண்டும் கட்டியெழுப்பும் விதமாக தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தைக் கவனத்துடனும் படிப்படியாகவும் விரிவுபடுத்தும் முடிவை எடுத்ததாக சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
ஜெர்மனி, புருணை ஆகிய நாடுகளுடன் ஏற்கெனவே இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இரு பரிசோதனைகள் போதும்
'விடிஎல்' திட்டத்தின்கீழ் வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைவதும் எளிதாக்கப்படும்.
அத்திட்டத்தின்கீழ் இங்கு வருவோர் சிங்கப்பூருக்குக் கிளம்புமுன், இங்கு வந்திறங்கியதும் என இருமுறை கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டால் போதும். இப்போதைக்கு, வெளிநாட்டுப் பயணிகள் நான்கு முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியுள்ளது.
அதாவது, சிங்கப்பூர் வந்துசேர்ந்த 3ஆம் நாளிலும் 7ஆம் நாளிலும் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதில்லை.
குறுகியகால விசா பயணிகளும் நீண்டகால விசா வைத்திருப்போரும் சிங்கப்பூர் வர, 'விடிஎல்' திட்டத்தின்கீழ் தடுப்பூசிப் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேவேளையில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் 'விடிஎல்' திட்டத்தின்கீழ் பயணம் செய்ய இயல்பாகவே தகுதிபெறுவர். அவர்கள் தடுப்பூசிப் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தேவை இல்லை.
'விடிஎல்' திட்டம் வழியாக தென்கொரியாவில் இருந்து சிங்கப்பூர் வரத் திட்டமிடுவோர் நவம்பர் 8ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து விண்ணப்பிக்கலாம்.
மற்ற எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்களும் நாளை மறுநாள் 12ஆம் தேதி காலை 10 மணியில் இருந்து விண்ணப்பிக்க முடியும். அந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து இங்கு வரலாம்.