தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) வரும் 11 நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான விதிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
தடுப்பூசி கட்டாயம்
பயணிகள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்கள் மின்னிலக்க முறையில் சரிபார்க்கத்தக்க தடுப்பூசிச் சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வர, குறுகியகாலப் பயணிகளும் நீண்டகால விசா வைத்து இருப்போரும் 'தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண அனுமதி' பெற விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இந்தப் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
என்றிலிருந்து விண்ணப்பிக்கலாம்
தென்கொரியா தவிர்த்து, மற்ற எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூர் வர நாளை மறுநாள் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியிலிருந்து விண்ணப்பிக்கலாம். 19ஆம் தேதியில் இருந்து அவர்களால் சிங்கப்பூர் வர இயலும்.
தென்கொரியாவிலிருந்து சிங்கப்பூர் வர நவம்பர் 8 காலை 10 மணியிலிருந்து விண்ணப்பிக்கலாம். அங்கிருந்து நவம்பர் 15 முதல் இங்கு வரலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://safetravel.ica.gov.sg/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.
சிறார்க்கு அனுமதியில்லை
'விடிஎல்' திட்டத்தின்கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். எனவே, 12 வயதுக்குக்கீழ் உள்ள சிறார் உட்பட தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் இத்திட்டத்தின்கீழ் பயணம் செய்ய முடியாது. 'விடிஎல்' திட்டத்தின்கீழ் வராத விமானங்களில் அவர்கள் பயணம் செய்யலாம். ஆனால், தனிமைப்படுத்திக்கொள்ளும் விதிகளுக்கு அவர்கள் உட்பட வேண்டும்.
கடைசி 14 நாள்கள்
இம்மாதம் 19ஆம் தேதி முதல், பயணிகள் சிங்கப்பூருக்குப் புறப்படுமுன் கடைசி 14 நாள்களும் 'விடிஎல்' திட்டத்தின்கீழ் வரும் நாடுகளில் இருந்திருக்க வேண்டும்.
பயணி ஒருவர் கடைசி 14 நாள்களில் சிங்கப்பூரில் இருந்திருந்தால், அவர் இங்கிருந்த நாள்களும் அந்த 14 நாள்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
கொவிட்-19 பரிசோதனை
இம்மாதம் 19ஆம் தேதி முதல், 'விடிஎல்' திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் பயணிகள், சிங்கப்பூருக்குக் கிளம்புவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னரும் இங்கு வந்திறங்கியவுடனும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இங்கு வந்திறங்கியபின் 3ஆம், 7ஆம் நாளில் அவர்கள் 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.
பயண விமானங்கள்
'விடிஎல்' திட்டத்தின்கீழ் இயக்கப்படும் விமானங்களில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். தென்கொரியா தவிர்த்த மற்ற எட்டு நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது 'விடிஎல்' சேவைகளை 14 நகரங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதுபோல், 'ஸ்கூட்' நிறுவனமும் வரும் 20ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூர்-பெர்லின் இடையே வாரம் மும்முறை விமானங்களை இயக்க இருக்கிறது.
இதர விதிமுறைகள்
குறுகியகாலப் பயணிகள் சிங்கப்பூர் வர தனியாக விசா பெற வேண்டும். சிங்கப்பூர் வர அனுமதி பெற்ற பிறகும் சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பும் விசா பெறும்படி அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். சிங்கப்பூருக்கு வருமுன், கொவிட்-19 சார்ந்த மருத்துவ சிகிச்சை, மருத்துவமனைக் கட்டணங்களுக்காக குறைந்தது $30,000 காப்புறுதி வழங்கும் பயணக் காப்புறுதியை அவர்கள் வாங்கியிருக்க வேண்டும். சிங்கப்பூரில் தங்கி இருக்கும் காலத்தில் வெளிநாட்டுப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் 'டிரேஸ்டுகெதர்' செயலி அல்லது கருவியைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.