சிங்கப்பூரில் கொவிட்-19 மொத்த மரண எண்ணிக்கை 153ஆகக் கூடிவிட்டது என்று சனிக்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கொரோனா தொடர்பான பிரச்சினைகள் காரணமாக 56 முதல் 90 வரை வயதுள்ள 11 பேர் மாண்டுவிட்டதாக சனிக்கிழமை அமைச்சு கூறியது.
தனி ஒரு நாளில் இந்த அளவுக்கு ஆக அதிகமாக மரண எண்ணிக்கை இதுவரை இருந்ததில்லை.
அந்த 11 பேரில் ஐந்து பேர் ஆண்கள், ஆறு பேர் பெண்கள். எல்லாரும் சிங்கப்பூரர்கள். நான்கு பேர் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். நால்வர் தடுப்பூசி போடாதவர்கள். மூவர் ஒரு தடுப்பூசி போட்டவர்கள்.
மாண்டவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாக அமைச்சு கூறியது.
சிங்கப்பூரில் சனிக்கிழமை நிலவரப்படி தொடர்ந்து 20 நாளாக அன்றாடம் கொவிட்-19 காரணமாக மரண சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
சனிக்கிழமை புதிதாக மொத்தம் 3,703 பேருக்குக் கிருமி தொற்றியது. அவர்களில் 2,868 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
வெளிநாட்டு தங்குவிடுதிகளைச் சேர்ந்தவர்கள் 832 பேர். மூவர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று அமைச்சு தெரிவித்தது.
தொற்று வெள்ளிக்கிழமையைவிட சனிக்கிழமை அதிகரித்தது.
சனிக்கிழமை சமூகத்தில் புதிதாக கிருமி தொற்றியோரில் 60க்கும் மேற்பட்ட வயதுள்ளவர்கள் 611 பேர்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 124,157 ஆக இருக்கிறது. சனிக்கிழமை நிலவரப்படி 15,606 பேர் வீடுகளில் குணமடைந்து வந்தனர். 2,875 பேர் சமூக வசிப்பிடங்களில் குணமடைந்து வந்தனர். 360 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மருத்துவமனைகளில் 1,569 பேர் சிகிச்சை பெற்றனர். 302 பேருக்கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்பட்டது. 40 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு இருந்தனர்.