ப. பாலசுப்பிரமணியம்
இளம் பருவத்தில் துள்ளலும் துடிப்புமாக இருந்த ராஜேந்திரன் ராஜ்கிரண், கல்வியில் சிறந்து விளங்கியதோடு எதிர்காலத்தில் விமானியாக வேண்டுமென்ற லட்சியத்துடன் இருந்தார்.
தெமாசெக் உயர்நிலைப் பள்ளியில் ஒருமுறை மருத்துவப் பரிசோதனையின்போது கண்களில் பிரச்சினை உள்ளது எனத் தெரிய வந்தது. சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தில் செய்யப்பட்ட சோதனையில், கண் விழித்திரையின் கட்டமைப்பைப் பாதிக்கும் நோய் அவருக்கு இருப்பதாகக் கூறப்பட்டது.
இதனால் பார்வை மங்கலாகத் தெரியும். நாளடைவில் பார்வை மோசமடையும். விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரை செய்யப்பட்டது. 15 வயதில் இந்த எதிர்பாரா நிகழ்வு ராஜ்கிரணின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. லட்சியம் கலைந்திட, படிப்பில் ஆர்வமும் குறைந்தது. எளிதில் ஆத்திரமடைவது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது போன்றவற்றை அனுபவித்தார்.
அப்போது அவருக்கு ஆதரவாக அவரின் பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் இருந்தனர். அவர்களுக்காக மீண்டு வர வேண்டும் என முடிவெடுத்து, சாதாரண நிலை தேர்வுக்குப் பின், நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரியில் சேர்ந்தார். சுற்றுப்புற, நீர் தொழில்நுட்பத் துறையில் பயின்றார். தொடர்ந்து தேசிய சேவை புரிந்த காலத்தில் அங்கிருந்த சிலர், தன்னைவிட அதிக வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்வதை அறிந்துகொண்டார்.
வழிகாட்டி இல்லாமல் அவர்களின் வாழ்க்கை திசைமாறிச் சென்றிடும் என்பதை உணர்ந்தார்.
வழி தவறிச் செல்வோருக்கு உதவ வேண்டும், அதையே தன் வருங்கால பணியாக்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். 2016ல் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக உளவியல் துறை பட்டப்படிப்பைப் பகுதிநேரமாக மேற்கொள்ள தொடங்கினார் ராஜ்கிரண்.
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருப்பவர்களை அடையாளம் காண்பதே சிரமம் என்றாலும் வலி தாங்கக்கூடிய இதயத்திற்கு லட்சியப் பாதையே கண்ணுக்குத் தெரிந்தது.
மேம்பட்ட பார்வையுடன் இயங்க, சிறப்பு 'லென்ஸ்' வகையைக் கண்களில் பொருத்தியவாறு தனது தினசரி பணிகளில் ஈடுபட்டார்.
கடந்த ஆண்டு முழு நேர இளையர் சமூக ஊழியர் பணியைச் சமாளித்தவாறு பட்டப்படிப்பில் ஈடுபட்டார். அதோடு வேலை கிடைப்பதற்கு முன், இந்து ஆலயங்களில் சிறுவர்களுக்குச் சமய நன்னெறிகளைக் கற்பிக்கும் 'புரொஜெக்ட் பக்தி' திட்டத்தில் தொண்டூழியராக சேவையாற்றினார்.
நீண்ட நேரம் கணினித் திரையைப் பார்த்துப் படிப்பதும் விசைப்பலகையில் எழுத்துகளைப் பதிவுசெய்வதும் கண் வலியையும் அவ்வப்போது தலைவலியையும் தரும்.
பல்கலைக்கழகத்திற்குப் பேருந்துப் பயணம் மேற்கொள்வது, திரையைப் பார்த்துக் கற்கும் பாடத்தைப் புரிந்துகொள்வது போன்றவற்றால் சிரமம் ஏற்பட்டாலும் இவற்றை இயல்பாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை அவர் வளர்த்துக்கொண்டார். படிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டாலும் தொடர்ந்து படிப்பேன் என்றது அவர் மனம்.
சில வேளைகளில் திரையைப் பார்த்துப் படிப்பதற்குப் பதிலாக புத்தகங்களைப் புரட்டிப் படிப்பேன் எனச் சந்திக்கும் சவால்களுக்கு மாற்று வழிகளை நாடினார்.
பல ஆண்டு உழைப்பின் பலனாக, கடந்த வாரம் நடந்த சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆண்டு இறுதிக்குள் தம் 'ஹானர்ஸ்' பட்டத்தையும் பூர்த்தி செய்யவுள்ளார்.
"வாழ்க்கையில் வெற்றி கண்டாலும் தோல்வி அடைந்தாலும் அது என்னுடைய பொறுப்பே, பிறரை அது பாதிக்கக்கூடாது. அப்படி வெற்றி கண்டால், அது எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும்," என்று கூறினார் எதிர்காலத்தில் ஆலோசனை வழங்கும் உளவியல் நிபுணராக பணியாற்ற விரும்பும் 27 வயது ராஜ்கிரண்.