கி. ஜனார்த்தனன்
'ராப்' பாடல்களைப் பாடுவது அத்தனை சுலபமல்ல. பின்னணி இசையுடன் சொற்களை மிக விரைவாக, சந்த நயத்துடன் பேசிக்கொண்டே பாடுவதில் பல நுணுக்கங்கள் அடங்கியுள்ளன.
இவ்வகைப் பாடல்களைப் பாடுவதில் வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரமாகத் திகழ்கிறார், 19 வயது சன்ஜய் சாமிநாதன்.
மக்கள் அதிகமாக நாடும் சமூக ஊடகங்கள்தான், தன் திறமையை வெளிக்காட்டுவதற்கான தளத்தை அளித்து வருவதாக சன்ஜய் கூறினார்.
மூன்று ஆண்டுகளில் இவர் மூன்று ராப் இசைத் தொகுப்புகளை வெளியிட்டு இணையவாசிகள் பலரது பாராட்டையும் பெற்று வருகிறார். தமது உண்மை வடிவத்தை வெளிப்படுத்தும் ஒரே வழியாக இசையைக் கருதுவதாக இந்த இளையர் கூறுகிறார்.
சிறு வயது முதல் தமிழ்ப் பாட்டுப் போட்டிகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் பாடி வந்த சன்ஜெய், தமது 15வது வயதில் முதல் ராப் காணொளியை யூடியூப் தளத்தில் வெளியிட்டார்.
அதுவரை, எதிர்காலத்தில் முழுநேர இசைக்கலைஞராக வேண்டும் என்ற தன் விருப்பத்தைக் கூறியசன்ஜயைப் பலரும் பலவாறு கேலி செய்தனர்.
"நான் நினைத்ததை என்னால் அடைய முடியாது என்று எனது ஆசிரியர் ஒருமுறை கூறினார். இது என் மனதைப் புண்படுத்தியது," என்றார் இந்த இளையர்.
இணைய வதைக்கு இவர் ஆளானபோதும் தொடர்ந்து முயன்று இறுதியில் இசைத் தயாரிப்பாளர் ஒருவரின் ஆதரவைப் பெற்றார்.
"அப்போதுதான் என்னைக் கேலி செய்வதைப் பலர் நிறுத்தினர். டேன் ரஃபெல் என்ற தயாரிப்பாளரின் ஆதரவைப் பெற்றுள்ளதால் எனது தன்னம்பிக்கை அதிகரித்தது," என்று சன்ஜய் கூறினார்.
தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் இசைவழி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியதால் சமூக ஊடகங்களில் இவரது படைப்புகள் பெரிதும் வரவேற்பு பெற்றதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
தற்போது இவர் பிரபல ராப் கலைஞரான டிரெவிஸ் ஸ்காட் என்பவரின் 'மெலோடிக் ராப்' பாணியைப் பின்பற்றி வருவதாகத் தெரிவித்தார்.
இந்தப் பாணி தனக்கு ஏற்றது என உணரும் வரை பல்வேறு பாணிகளில் முயற்சி செய்து அதில் தோல்வியையும் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தன்னைத் திருத்திக்கொள்ள முற்படும்போதுதான் கலைஞர்களின் தரம் மேம்படும் என்று சன்ஜய் கூறினார்.
இந்தப் பாதையில் செல்வதற்குத் தம்முடைய தந்தை பெரும் ஊக்கம் தந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் தமது மகன் ராப் செய்து வருவது தமக்குத் தெரியவில்லை என்று சன்ஜயின் தந்தை 55 வயது எம். சாமிநாதன் கூறினார்.
மூத்த பாதுகாவல் அதிகாரியாக பணிபுரியும் திரு சாமிநாதன், தம் மகன் தவறான வழியில் போகாமல் படிப்பின் மீது கவனம் செலுத்துவார் என்ற நிபந்தனையை சன்ஜயிடம் முன்வைத்தார்.
மகனுக்குத் தமது ஆதரவுடன் ஒலிப்பதிவுகளைச் செய்வதற்கான பணத்தையும் வழங்கினார்.
ஆனாலும் போட்டித்தன்மை மிக்க இசைத்துறையில் சன்ஜயால் முழு நேரக் கலைஞராகத் தாக்குப்பிடிப்பது மிகக்கடினம் என்பது இவரது கருத்து.
தற்போது தொழிற்கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் இயந்திரவியல் இரண்டாம் ஆண்டில் பயிலும் சன்ஜய், பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர விரும்புகிறார்.