இல்லத் தனிமை உத்தரவை மீறிய முழுநேர சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தேசிய சேவையாளருக்கு 18 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 23 வயது ஃபதுல்லா அப்துல் ரஹ்மானுக்கு கொவிட்-19 அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு இல்லத் தணிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியன்று அவருக்கு சளி, தொண்டை வலி, இருமல் ஏற்பட்டது.
அவரது மூச்சுக் குழாயின் மேற்பகுதியில் தொற்று ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்த மருத்துவர் முடிவுகள் வெளிவரும் வரை வீட்டிலேயே இருக்குமாறு கூறினார். அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும் அவர் இல்லத் தனிமை உத்தரவுக்கு உட்படாமல் பூகிஸ் ஜங்ஷனுக்கும் சாமர்சட்டில் உள்ள சறுக்கு விளையாட்டுப் பூங்காவுக்கும் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது பிறகு உறுதி செய்யப்பட்டது.
மருத்துவ விடுப்பில் இருந்தபோது இல்லத் தனிமை உத்தரவை மீறி நான்கு முறை வெளியே சென்றார்.
இதுதொடர்பாக அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகின. ஃபதுல்லாவுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதும் அவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நான்கு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
அதனை அடுத்து, அவர் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள டி'ரிசோர்ட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று அவர் வீடு திரும்பினார்.
இல்லத் தனிமை உத்தரவை மீறி அவர் சிங்கப்பூர் எக்ஸ்போ, தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள இக்கியா கடைத்தொகுதி, காலாங் ஆகிய இடங்களுக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பிரிவுத் தலைவராவதற்குத் தேவையான பயிற்சியில் ஈடுபட ஃபதுல்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் இல்லத் தனிமை உத்தரவை அவர் மீறியதால் அந்த வாய்ப்பை அவர் இழந்துவிட்டதாகவும் அவரது வழக்
கறிஞர் திருவாட்டி யமுனா
பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.