'டுகோங்' எனப்படும் பாலூட்டி விலங்கின் சடலம் கடந்த சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பரிசோதனை செய்ததில் அது பலத்த காயத்தால் உயிர் இழக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், அந்த விலங்கு மாண்ட காரணத்தைக் கண்டறிய, தொடர்ந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் லீ கொங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்துடனும் உயிரியல் அறிவியல் துறையுடனும் சேரந்து பணியாற்றி வருவதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.
அருகிவரும் உயிரினத்தைச் சேர்ந்த அந்த டுகோங்கின் சடலம் கடலில் மிதந்தவாறு சிங்கப்பூரின் தென் தீவுகளில் ஒன்றான புலாவ் ஹந்துவுக்கு அருகில் பொழுதுபோக்கு முக்குளிப்பாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.
தேசிய பூங்காக் கழகத்தின் டாக்டர் கெரியேன், இளம் டுகோங்குகள் முதிர்ச்சி அடையும் வரை தாயுடன் இருப்பது வழக்கம். இறப்புக்கு முன்னால் குட்டியும் தாயும் பிரிந்திருக்கலாம் என்று கூறினார்.
அரும்பொருளகத்தில் பாலூட்டி இன ஆய்வாளரான மார்கஸ் சுவா மாண்ட டுகோங் குட்டியின் அளவு 1.4 மீட்டர் என்றும் டுகோங்குகள் சாதாரனமாக 2.4 மீட்டர் அளவுக்கு வளரும் என்றும் விளக்கினார். மேலும் டுகோங் குட்டிகள் நீண்ட காலம் தாய் டுகோங்கால் பராமரிக்கப்படும் என்றும் கூறினார்.
குட்டி தாயிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தால் அதனால் உயிர் வாழ்ந்திருக்காமல் போயிருக்கும். ஏனேனில் குட்டிகளுக்கு கடல் புல்லும் தாய்ப்பாலும் தேவைப்படும். அதுமட்டுமின்றி, சுயமாக உயிர் வாழ குட்டிக்குத் தாய் டுகோங் கற்றுக் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
பரிசோதனையில் குட்டியின் வயிறு நிறைய உணவு இருந்ததை வைத்து, இறப்புக்கு முன் அது இரை தின்றிருக்கும் என்று கூறப்பட்டது. இது கவலை தரும் நிகழ்வாக இருந்தாலும் டுகோங்குகள் சிங்கப்பூர் கடல்களில் பெருகி வருவதன் ஆதாரமாகவும் திகழ்கிறது என திரு சுவா கூறினார்.