மைத்துனரிடம் அத்துமீறியதாகப் பெண்மீது குற்றச்சாட்டு

1 mins read
1d32d096-8b4a-48a4-9bdf-07b321e86637
-

அரியதொரு வழக்காக, தமது 31 வயது மைத்துனரை மானபங்கம் செய்ததாக 33 வயதான சிங்கப்பூர் பெண் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

மானபங்கம், துன்புறுத்தல் உட்பட ஒன்பது குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.

அந்த ஆடவரின் அடையாளங்களைப் பாதுகாக்கும்பொருட்டு அப்பெண் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சிங்கப்பூரின் தென்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி பின்னிரவில் அப்பெண் தம் மைத்துனரைக் கட்டிப் பிடித்து, முதுகில் முத்தமிட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அதிகாலையில் அந்த ஆடவரின் உடலில் தகாத இடத்தில் அவர் கைவைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வாண்டு ஜூலை மாதத்தில்தான் அப்பெண் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் எத்தகைய குற்றங்களுக்காகச் சிறை சென்றார் என்பது தெரியவில்லை.

தண்டனைக் குறைப்பு ஆணையால் முன்னதாகவே விடுவிக்கப்பட்ட அப்பெண், ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை வேறு எந்தத் தவற்றையும் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், அவர் அதனைமீறி, ஆகஸ்ட் 12ஆம் தேதி தம் மைத்துனரிடம் அத்துமீறி நடந்துகொண்டார்.

இதனால், அவர்மீதான அண்மைய குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டால் அவர் கூடுதல் காலம் சிறையில் அடைபட்டிருக்க நேரிடும்.

ஒவ்வொரு மானபங்கக் குற்றத்திற்கும், குற்றவாளிக்கு ஈராண்டுவரை சிறையும் அபராதம் அல்லது பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

பெண் குற்றவாளிகளுக்குப் பிரம்படி தண்டனை விதிக்கப்படாது.

குறிப்புச் சொற்கள்