பைனியர் வட்டாரத்தில் நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 11) பிற்பகல் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில், காரில் சிக்கிக்கொண்ட ஆடவர் ஒருவர் மீட்கப்பட்டார்.
ஜாலான் அகமது இப்ராகிம், பினாய் சாலைச் சந்திப்பில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஒரு கனரக வாகனம், ஒரு லாரி, மூன்று கார்கள் சிக்கிக்கொண்டன.
நண்பகல் 12.20 மணியளவில் இந்த விபத்து குறித்து தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், காரின் ஓட்டுநர் இருக்கையில் ஆடவர் ஒருவர் சிக்கிக்கொண்டதைக் கண்டறிந்தனர். போக்குவரத்து விளக்குக் கம்பத்தின்மீது அந்த கார் மோதியிருந்தது.
நிலைகுலைந்து காணப்பட்ட அந்த காரை நிலைப்படுத்திய பிறகே அந்த ஆடவரை அதிகாரிகள் மீட்டனர்.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது 54 வயது ஓட்டுநரும் 53 வயது ஆடவர், 48 வயது மாது ஆகிய இரு பயணிகளும் சுயநினைவுடன் இருந்ததாக போலிஸ் கூறியது.
விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.