கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்து மீறியதற்காக எட்டு இரவு விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த எட்டு இடங்களையும் பத்திலிருந்து 30 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதற்காக அவற்றின்மீது மீது குற்றச்சாட்டுகள் பதிவாகக்கூடும். விதிக்கப்பட்ட வரம்புக்கு மீறி அதிகமானோர் ஒன்றுகூடியது போன்ற விதிமீறல்கள் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை நடத்திய போது இந்த எட்டு இடங்களில் நிகழ்ந்த விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. கொன்கார்ட் ஹோட்டலில் உள்ள கிளப் ஒன் மின், ஓரியன்டல் பிளாசாவில் உள்ள கிளப் மாவ், விவா விஸ்டா கடைத்தொகுதியில் உள்ள ஹூஹா உணவகம் ஆகியவை உரிமம் ரத்து செய்யப்பட்ட எட்டு இரவுவிடுதிகள், உணவகங்களில் அடங்கும். கொவிட்-19 விதிமுறைகளை மீறுவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

