நேற்று முன்தின நிலவரப்படி கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரில் மேலும் பத்து முதியவர்கள் மாண்டுவிட்டனர். மாண்டவர்கள் 73 வயதுக்கும் 93 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஏழு பேர் ஆடவர்கள், மூவர் பெண்கள். இதன்மூலம் சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 172ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மாண்டவர்களில் நான்கு பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள். மூவர் ஒரு தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்கள். மூவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.
மாண்ட பத்து பேரும் ஏற்கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு என்னென்ன நோய்கள் இருந்தன என்பது குறித்து சுகாதார அமைச்சு தகவல் வெளியிடவில்லை.
இதற்கிடையே, நேற்று முன்தினம் நண்பகல் நிலவரப்படி மொத்தம் 2,263 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. சமூக அளவில் 1,949 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 388 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளில் 306 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த எட்டு பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த வாரயிறுதியில் செய்யப்பட்ட கொவிட்-19 பரிசோதனைகளில் இவர்களுக்குக் கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தது. வாரயிறுதி நாட்களில் குறைந்த அளவிலான பரிசோதனைகள் நடத்தப்படுவது வழக்கம் என்று சுகாதார அமைச்சு கூறியது. நேற்று முன்தினம் பதிவான எண்ணிக்கையுடன் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 129,229ஆக
அதிகரித்துள்ளது.