பலதுறை மருந்தகங்களுக்குச் செல்வோரு தாதியர் வழங்கக்
கூடிய சேவைகள் சிலவற்றை தற்போது 'ரோபோ' எனப்படும் இயந்திர மனிதன் கவனிக்க உள்ளது. தெம்பனிஸ் பலதுறை மருந்தகத்திற்கு இந்த மாதம் செல்வோர் 'ஹிரோ' என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த இயந்திர மனிதனைப் பார்த்து வியக்கக்கூடும்.சோதனை முயற்சியாக அங்கு இது ஈடுபடுத்தப்பட உள்ளது.
அங்கு வருவோரின் உடல்வெப்பநிலையைக் கணக்கிடுவது, முகக்கவசம் அணியுமாறு நினைவூட்டுவது போன்றவை உள்ளிட்ட சேவைகளை 'ஹிரோ' வழங்கும்.
அத்துடன் கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழிக்கக்கூடிய புறஊதா விளக்குகளை இது பயன்படுத்துகிறது. வருகையாளர்கள் எந்தெந்த சேவை முனைக்குச் செல்ல வேண்டும் என வழிநடத்தும்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் ஹிரோவை உருவாக்கி உள்ளனர்.
அக்கல்லூரியின் இயந்திர மனித ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தின் உதவி இயக்குநர் ஹுயி டின் ஃபாட் 'ஹிரோ'வின் அவசியம் குறித்து செய்தியாளர்
களிடம் விளக்கினார்.
"பலதுறை மருந்தகங்களில் தொற்று பரவுவதற்கான சாத்தியத்தை 'ஹிரோ' இயந்திர மனிதன் குறைக்கிறது. அத்துடன் சிக்கலான பணிகளில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் வேலைப்பளுவை இது குறைக்கிறது. உதாரணத்திற்கு, எளிதில் எட்ட முடியாத பகுதிகளைச் சுத்தம் செய்வது, உடல்வெப்பத்தைப் பரிசோதிப்பது போன்ற பணிகள் அவற்றுள் அடங்கும். கொள்ளைநோய் சூழலில் இந்த இயந்திர மனிதனின் உதவி அவசியமாகிறது," என்றார் அவர்.
'ஹிரோ'வை உருவாக்க நீ ஆன் பலதுறைத் தொழில் கல்லூரியுடன் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனமான சிங்ஹெல்த் கூட்டுச் சேர்ந்து பணியாற்றியது. சிங்கப்பூர் முழுவதும் உள்ள 20 பலதுறை மருந்தகங்களில் 7ஐ சிங்ஹெல்த் ஏற்று நடத்து கிறது.