குறைவான வீடுகள் கைமாறிய
போதிலும் தனியார் அடுக்குவீடு
களின் மறுவிற்பனை விலைகள் தொடர்ந்து 14வது மாதமாக செப்டம்பரில் ஏற்றம் கண்டன. சொத்துச் சந்தை இணையவாசலான எஸ்ஆர்எக்ஸ் தனது முன்னோடி மதிப்பீட்டில் நேற்று இதனைத் தெரிவித்தது.
கொண்டோமினிய வீடுகளின் மறுவிற்பனை விலைகள் மாதத்திற்கு மாதம் என்னும் அடிப்படையில் கடந்த மாதம் 1 விழுக்காடு உயர்ந்தன. இது ஆகஸ்ட் மாதத்தில் 0.5 விழுக்காடாக இருந்தது என எஸ்ஆர்எக்ஸ தரவுகள் உணர்த்தின.
அதேநேரம் ஆண்டுக்காண்டு என்னும் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பரைக் காட்டிலும் இந்த செப்டம்பரில் மறுவிற்பனை விலைகள் 8.9 விழுக்காடு கூடின.
விலைகள் உயர்ந்தாலும் பரிவர்த்தனையில் பங்கேற்றதாக மதிப்பிடப்படும் வீடுகளின் எண்ணிக்கை செப்டம்பரில் குறைவு. அதாவது, மொத்தம் 1,736 வீடுகள் கை
மாறின.
ஆகஸ்ட் மாதத்தில் இதைக் காட்டிலும் 3.8 விழுக்காடு அதிகமாக, 1,805 வீடுகள் விற்பனை ஆயின.
"மூதாதையரை நினைவுகூரும் 'ஹங்ரி கோஸ்ட்' விழா சமயத்தில் விற்பனை சரிவது வழக்கம். கொண்டோமினிய வீடுகளின் விற்பனையும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம். செப்டம்பர் தொடக்கத்தில் இவ்விழா நிறைவுற்றது.
"மேலும், செப்டம்பர் 27 முதல் ஒரு வீட்டில் இருந்து நாள் ஒன்றுக்கு இரு பார்வையாளர்கள் வரை தான் செல்லமுடியும் என்ற கொவிட்-19 கட்டுப்பாடு நடப்புக்கு வந்தது.
"புதிய சொத்துகளைப் பார்வையிடுவது இதனாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம்," என்று ஆரஞ்சுடீ அண்ட் டை சொத்து நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ்டின் சன் கூறினார்.

