கட்டட மேலாளர் தே ஜியாஹீ, தான் உருவாக்கிய கட்டட நுழைவு அட்டையைப் பயன்படுத்தி ஸ்காட்ஸ் ஸ்குவேரில் உள்ள கொண்டோமினிய வீடுகளுக்குள் நுழைந்து $28,000 ரொக்கத்தையும் கிட்டத்தட்ட $86,000 மதிப்புள்ள 'ஹமீஸ்' கைப்பைகளையும் திருடினார்.
37 வயதாகும் திரு தே குற்றங்களை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பளிப்பின்போது வேறு இரு வீடுகளில் அவர் திருடிய குற்றங்களும் கருத்தில் கொள்ளப்படும்.
அவ்விரு வீடுகளிலிருந்து சிங்கப்பூரரான திரு தே, $2,000 மதிப்புள்ள காலணிகளையும் இரண்டு புத்தகங்களையும் சென்ற ஆண்டு திருடினார்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு தமது கட்டட நுழைவு அட்டையை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வேலைக்கு திரு தே வந்தபோது முதன்முதலில் அவர் சுயமாக ஒரு கட்டட நுழைவு அட்டையை உருவாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் திரு தே பணியிலிருந்தபோது ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கான தனியார் மின்தூக்கியைப் பயன்படுத்தி, அவ்வீட்டினுள் நுழைந்து $10,900 மதிப்புள்ள 'ஹமீஸ்' கைப்பையைத் திருடினார்.
கடந்த மே மாதம் வேறொரு வீட்டுக்குள் நுழைந்து நிலைப்பேழை ஒன்றில் பல கடித உறைகள் இருந்ததைத் கண்டார்.
அவற்றில் இரண்டைத் திருடினார். அவற்றுள் இருந்த $28,000 பணத்தை திரு தே தமது வங்கிக்கணக்கில் போட்டுக்கொண்டார்.
மூன்றாவதாக ஒரு வீட்டில் நுழைந்து $87,000 பெறுமானமுள்ள இரண்டு 'ஹமீஸ்' கைப்பைகள், ஒரு மோதிரம், ஒரு கைக்கடிகாரம் ஆகியவற்றைத் திருடினார்.
போலிசார் கடந்த ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி விசாரணைகளைத் தொடங்கினர்.
விரைவில் திரு தே பிடிபட்டார். அவரது வீட்டிலிருந்து திருட்டுப்போன ஒரு 'ஹமீஸ்' கைப்பை கண்டெடுக்கப்பட்டது.
நீதிபதி கெஸ்லர் சோ, மிகுந்த மனச்சோர்வுக் பிரச்சினையுள்ள திரு தேக்குக் கட்டாய சிகிச்சை ஆணையைப் பிறப்பித்துள்ளார்.
இவ்வாணை பிறப்பிக்கப்பட்டோர் சிறைத் தண்டனைக்குப் பதிலாக மனநல சிகிச்சை பெற வேண்டும். நவம்பர் ஒன்பதாம் தேதி இவ்வழக்கின் தொடர்பில் தீர்ப்பளிக்கப்படும்.
ஒவ்வொரு திருட்டுக்கும் குற்றவாளிக்கு ஏழாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.