கர்ப்பிணியான தமது காதலி, தம்முடன் வசிக்க மறுத்ததால் கோபிநாத் ராஜா என்ற ஆடவர், ஒரு பள்ளியின் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்துகொண்டிருந்த அந்தப் பெண்ணைத் தாக்கினார்.
அந்தப் பெண் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கர்ப்பமாக இருந்ததை அறிந்திருந்தும், 29 வயது கோபிநாத் அவரை வயிற்றுப்பகுதியில் உதைத்து, தலைமுடியைப் பிடித்து இழுத்து அவரைத் தரையில் தர தர என்று இழுத்துச் சென்றார்.
இக்குற்றங்களை ஒப்புக்கொண்ட கோபிநாத்துக்கு நேற்று முன்தினம் ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அரசு ஊழியர் ஒருவர் தமது பணியைச் செய்வதைத் தடுத்தது, அவர் மீது தகாத சொற்களைப் பயன்படுத்தியது, சமுதாயத்தில் சட்டவிரோதமாக நடந்துகொண்டது ஆகிய குற்றங்கள் அவர் மீது சாட்டப்பட்டன. இது போன்ற மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
முக்குளிப்பாளராகப் பணிபுரிந்த கோபிநாத்துக்கும் அவரது காதலிக்கும் இடையே இவ்வாண்டு ஆகஸ்ட் நான்காம் தேதி தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சீற்றம் கொண்ட கோபிநாத், அவரது காதலி பணிபுரிந்த உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று தகராறு செய்தார். பள்ளியில் பணிபுரிந்த மற்றவர்கள் இதைக் கவனித்து, தலையிட்டு போலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட அந்த 30 வயது பெண்ணுக்குத் தலையிலும் உடலிலும் பல காயங்கள் ஏற்பட்டு, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு நடந்த பரிசோதனைகளுக்குப் பிறகு, வயிற்றில் வளரும் சிசுவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கண்டறியப்பட்டது.
போலிஸ் அதிகாரிகள் கோபிநாத்தை ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தின் அடியில் தடுத்து நிறுத்தி வைத்திருந்தபோது அவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதோடு அவர்களிடம் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.
டிசம்பர் 2019ல் நிகழ்ந்த ஓர் இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் கோபிநாத் குண்டர் கும்பலுடன் தொடர்புடைய சைகைகளைக் காட்டி, அதனோடு தொடர்புடைய வாசகங்களையும் உரக்கக் கத்தினார் என்றும் தெரியவந்துள்ளது. போலிசார் அவரை எச்சரித்தும் அவர் மீண்டும் அவ்வாறு செய்ய, கோபிநாத் உடனே தடுத்து வைக்கப்பட்டார். பின்னர், ஏட்டோஸ் துணை போலிஸ் அதிகாரி ஒருவர் அவரை போலிஸ் கென்டான்மண்ட் வளாகத்துக்கு அழைத்துச் சென்றபோது, கோபிநாத் அவர் மீது தகாத சொற்களைப் பயன்படுத்தியதுடன், அவர் மீது எச்சில் துப்பினார்.
கோபிநாத்தின் வேதனை தரும் நடத்தையைக் கருத்தில்கொண்டு குறைந்தது அவருக்கு 23 வாரச் சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
வேண்டுமென்றே தீங்கு விளைவித்ததுக்குக் கோபிநாத்துக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
அரசு ஊழியரைத் தாக்கினால் நான்காண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.