மண்டாயில் தற்போதுள்ள மூன்று வனவிலங்குப் பூங்காக்களில் ஒன்றான 'ரிவர் சஃபாரி', 'ரிவர் வொன்டர்ஸ்' எனப் பெயர் மாற்றம் காண்கிறது. இதர இரண்டு பூங்காக்களான 'சிங்கப்பூர் சூ' எனும் சிங்கப்பூர் விலங்குத் தோட்டம், 'நைட் சஃபாரி' ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படமாட்டா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டாய் வனவிலங்குக் காப்பகமாக நேற்று பெயர் மாற்றம் கண்ட சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின் தலைமை நிர்வாகியான திரு மைக் பார்க்லே இவ்விவரங்களை வெளியிட்டார். குழுமத்தின் புதிய அடையாளத்தை அறிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
மேலும், மண்டாய் பகுதியில் இரண்டு புதிய வனவிலங்குப் பூங்காக்களைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொவிட்-19 சூழலால் அவற்றைத் திறப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூரோங்கில் உள்ள பறவைப் பூங்கா மண்டாய்க்கு இடம் மாற்றப்படும் என்று 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்பூங்காவை சென்ற ஆண்டு பொதுமக்களுக்குத் திறந்துவிடத் திட்டமிடப்பட்டிருந்தது. 'பர்ட் பேரடைஸ்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய பறவைப் பூங்கா அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ரெய்ன்ஃபாரஸ்ட் வைல்ட்' என்றழைக்கப்படும் மற்றொரு புதிய பூங்காவை 2023ஆம் ஆண்டில் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது இப்போது 2024ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவின் வடிவம், காட்டுப் பகுதியைக் கருப்பொருளாகக் கொண்டிருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது சவாலானது எனத் திரு பார்க்லே குறிப்பிட்டார். கொவிட்-19 சூழலால் தற்போதிருக்கும் ஊழியர்களுடன் பணிகளில் ஈடுபடுவது சவாலாக இருப்பதுடன் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தும் உத்தரவு போன்ற விதிமுறைகளும் நடப்பில் உள்ளதை திரு பார்க்லே சுட்டினார். இதனால் பொதுவாக ஊழியர்கள், பொருட்கள் பற்றாக்குறை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்ட பிறகு மண்டாய் பகுதியில் மொத்தம் ஐந்து பூங்காக்கள் இருக்கும். அப்பகுதி 'மண்டாய் வைல்ட்லைஃப் ரிசவ்' எனப்படும் மண்டாய் வனவிலங்குக் காப்பகம் என்று அழைக்கப்படும்.