செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
774bc06b-82ed-401a-9dfd-241660deafeb
-

தத்தெடுக்க விரும்பும் குடும்பங்களுக்கு உதவி

பிள்ளைகளைத் தத்தெடுக்கும் எண்ணம் கொண்டுள்ள குடும்பங்களுக்கு உதவும் முயற்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இறங்கியுள்ளது. பிள்ளைகளைத் தத்தெடுக்கும்போது குடும்பங்களுக்கு இருக்கக்கூடிய ஐயங்கள், கேள்விகள், சந்தேகங்கள் ஆகியவற்றுக்குப் பதில்களை அளிக்கும் தளம் அமைச்சின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

இது, தத்தெடுக்கும்போது தொடக்கத்தில் குடும்பங்களுக்குக் கைகொடுக்க அமைக்கப்பட்டுள்ளது. துன்புறுத்தலுக்கு ஆளான, புறக்கணிக்கப்பட்ட பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான நிலையான குடும்பச் சூழல் தேவைப்படும். அதனால் பிள்ளைகளைத் தத்தெடுக்க நினைக்கும் பெற்றோரைத் தான் ஊக்குவிப்பதாக அமைச்சு சொன்னது.

'சொத்து முதலீடு இனி சிறந்த ஓய்வுகால சேமிப்பாக இருக்காது'

சிங்கப்பூரில் பல காலமாக சொத்துகளில் முதலீடு செய்வதுதான் பலருக்கு ஆகச் சிறந்த தெரிவாக இருந்து வந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவருவதாக 'டிபிஎஸ்' வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சொத்துகளில் முதலீடு செய்வது வருங்காலத்தில் எதிர்பார்த்த வருவாயை ஈட்டாது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அதிக விலைக்குப் போகும் சிறிதாக இருக்கும் புதிய சொத்துகளுக்கு இது பொருந்தும். மேலும் சொத்துகளின் விலை அதிகரிக்கும் வேகத்தில் மக்களின் வருவாய் ஏறவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக, தனது வீட்டை விற்று அதே பரப்பளவைக்கொண்ட அல்லது அதைவிடப் பெரிய தனியார் வீட்டை வாங்க எண்ணும் குடும்பம், தனது ஓராண்டு சம்பளத்தில் 15 மடங்கைக் கட்ட நேரிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் $4,000 இழந்த ஆசிரியர்

பியெட்ரிஸ் (அவரது உண்மையான பெயர் அல்ல) எனும் 32 வயது ஆசிரியர், வேலை தருவதாகச் சொன்ன மோசடிக்கு ஆளாகியுள்ளார். அந்த மோசடியில் அவர் 4,000 வெள்ளியை இழந்துள்ளார். தனது குடும்பத்திற்கு உதவ பகுதிநேர வேலை செய்து கூடுதல் சம்பளம் ஈட்ட பியெட்ரிஸ் எண்ணம் கொண்டிருந்தார்.

'ஷாப்பி' மின்வர்த்தகத் தளத்தில் பொருட்களை வாங்கினால் செலவான தொகையுடன் கூடுதல் ஊதியமும் வழங்கப்படும் என்று அவருக்கு ஆசை காட்டப்பட்டது. ஆனால் 'ஷாப்பி' தளத்தில் கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக வங்கிக் கணக்கு ஒன்றுக்குப் பணம் அனுப்புமாறு ஏமாற்றுக்காரர்கள் அவரிடம் கூறியிருக்கின்றனர். இவ்வாறு பியெட்ரிஸ் மோசடிக்கு ஆளானார்.

இந்த மோசடியின் தொடர்பில் போலிசார் 19 சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர். அவர்களில் 16 பேர் ஆண்கள், மூவர் பெண்கள். இவ்வாரம் இரண்டு நாட்களுக்கு நடத்தப்பட்ட நோதனைகளில் அவர்கள் கைதாயினர்.

முதியவரைக் குளுப்பாட்டும்போது

காணொளி எடுத்ததாகச் சந்தேகம்

வயதான தனது முதலாளியைக் குளுப்பாட்டிவிடும்போது அதைக் காணொளியில் பதிவுசெய்ததாகச் சந்தேகிக்கப்படும் பணிப்பெண் மீது இன்று குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.அப்படிப் பதிவுசெய்த ஒரு காணொளியைப் பணிப்பெண் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், காணொளிகளை அவர் பிறருக்கு அனுப்பியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது எனப் போலிசார் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று போலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதே நாளில் ரகசியமாக பிறரின் அந்தரங்க நடவடிக்கைகளை நோட்டமிடுவது போன்ற விவகாரங்களின் தொடர்பில் பணிப்பெண் கைதுசெய்யப்பட்டார். பணிப்பெண் எடுத்ததாகச் சொல்லப்படும் காணொளி 'டிக்டாக்' சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. காணொளி பலரால் பகிரப்பட்ட பிறகு அது அகற்றப்பட்டது. சரியாக நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையில் இருப்போர் சம்பந்தப்படும் இத்தகைய குற்றச் செயல்கள் நிகழ்வதைத் தாங்கள் அறவே சகித்துக்கொள்ளமாட்டோம் எனப் போலிசார் கூறினர்.