துவாஸ் தொழில்துறைப் பகுதியில் நேர்ந்த விபத்தைப்போல் இனி ஒன்று நிகழாமல் தவிர்க்க பொதுமக்கள் பரிந்துரைகளை முன்வைக்கலாம். இச்சம்பவத்திற்கான விசாரணைக் குழு, பரிந்துரைகளை எழுத்து வடிவில் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இம்மாதம் ஏழாம் தேதியன்று தொடங்கிய பொதுமக்கள் கலந்துகொண்ட இவ்விபத்து தொடர்பிலான முதற்கட்ட விசாரணை அமர்வுகள் நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
விபத்து சம்பந்தப்பட்ட இரு அம்சங்களின் தொடர்பில்தான் பரிந்துரைகள் இருக்கவேண்டும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
முதல் அம்சம், பாதுகாப்பான முறையில் இயந்திரங்களைத் தருவிப்பது, அவை நன்கு செயல்படுவதை உறுதிசெய்வது, அவற்றை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பிலானது. தீப்பிடிக்கக்கூடிய ரசாயனத் தூள் போன்ற பொருட்களைப் பாதுகாப்பாக விநியோகிப்பது, கையாள்வது உள்ளிட்டவற்றின் தொடர்பில் இரண்டாவது அம்சம் அமையும். பிப்ரவரி 24ஆம் தேதியன்று நேர்ந்த விபத்துக்கும் களிமண் போன்றிருக்கும் பொருளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஓர் இயந்திரத்திற்கும் தொடர்பிருந்ததாகச் சொல்லப்படுகிறது. வெடிப்பு நேர்ந்த பிறகு அந்த இயந்திரத்தின் கீழ்ப் பகுதி சேதமடைந்ததிருந்தது தெரியவந்தது.
பொதுமக்கள் தங்களின் பரிந்துரைகளை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். பரிந்துரை செய்வோர் தங்களின் பெயர், வேலை, முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிடவேண்டும். மனிதவள அமைச்சைச் சேர்ந்த ஆட்ரீனா சுவா அல்லது டெல்விந்தர் சிங் ஆகியோருக்கு மின்னஞ்சல்வழி பரிந்துரைகளை அனுப்பலாம்.விபத்தின் தொடர்பிலான இரண்டாம் கட்ட விசாரணை அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று தொடங்கும்.

