சிங்கப்பூர் வனவிலங்குப் பூங்காவில் உள்ள காண்டாமிருகக் கூண்டின் பின்வாசல் வழியாகக் கடந்த டிசம்பர் மாதம் நுழைந்த ஆடவர், பிணையில் வெளியான நிலையில் போதைப்பொருள் உட்கொண்டு இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
ரால்ஃப் வீ யி கேய், 19, (படம்) எனப்படும் அந்த ஆடவர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இக் குற்றம் சுமத்தப்பட்டது. காணொளி இணைப்பு மூலம் அவர் நீதிமன்ற விசாரணையில் தோன்றினார். கடந்த ஜூலை மாதம்தான் இவர் மீது ஏற்கெனவே சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன.
குறும்புச் செயல்கள், தீங்கிழைக்கும் குறும்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றரீதியான அத்துமீறல் போன்றவற்றுக்காக அவை சுமத்தப்பட்டன.
அப்போது அவர் $15,000 பிணையில் வெளியில் விடப்பட்டார். அந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் அவர் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது. நிபந்ததையை மீறியதற்காக அவரது பிணை ரத்து செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார் வீ.