ஆசிய பசிஃபிக் பீரிவரிஸ் அறநிறுவனம், உடற்குறை உள்ளவர்களுக்கான கல்வி உபகாரச் சம்பளத்தை ஆறு பேருக்கு வழங்கி யது. கடந்த 2004 முதல் இதுவரை 52 பேருக்கு இந்த அறநிறுவனம் $2 மில்லியனுக்கும் அதிக தொகையை உபகாரச் சம்பளமாகக் கொடுத்து இருக்கிறது.
இந்த உதவி பெற்றவர்களில் இந்த ஆண்டின் 2020 தோக்கியோ உடற்குறையாளர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட குமாரி யிப் பின் ஸியு, திரு டோ வெய் சூங் ஆகிய இருவரும் அடங்குவர்.
இந்த அறநிறுவனத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்று சாதித்தவர்களில் திரு நீரத் சிங் ராஜ்பால் ஒருவர். இவருக்கு காதுகேளாத பிரச்சினை உண்டு. தன்னைப் போல பாதிக்கப்பட்டு உள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் 16 வயதில் வியட்னாமில் ஓர் அமைப்பு ஒன்றை இவர் ஏற்படுத்தினார்.
சிங்கப்பூரரான இவர், வியட்னாமில் வளர்ந்தவர். நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஏறத்தாழ $7,000 திரட்டி காதுகேளாத ஏழை மாணவர்களுக்கு எம்பி4 சாதனம், ஆங்கில ஒலிப்புத்தகங்கள். காதொலிச் சாதனங்கள் போன்றவற்றை வழங்கினார்.
வியட்னாமில் இவர் ஏற்படுத்திய 'ஹியரிங் வியட்னாம்' என்ற ஓர் அமைப்பு, ஹோ சீ மின் சிட்டியில் காதுகேளாதோருக்கான மூன்று பள்ளிக்கூடங்களுக்கு உதவி இருக்கிறது.
திரு நீரத், 21, இப்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொருளியல் படிக்கிறார்.
கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்வி துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், சிறப்பு உதவி தேவைப்படும் மாணவர்களில் மேலும் பலரை உள்ளடக்கும் வகையில் கல்வியை விரிவுபடுத்த கடந்த பல ஆண்டுகளாக கல்வி அமைச்சு அதிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார்.


