கொவிட்-19 கிருமிப் பரவலைச் சமாளித்து வரும் வேளையிலும் பேரிடர் நிர்வாகப் பணிகளில் ஆசியான் நாடுகள் தொடர்ந்து கவனம் செலுத்துவது முக்கியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் திரு கா. சண்முகம் கூறியுள்ளார்.
பேரிடர் குறித்த ஒன்பதாவது ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றியபோது திரு சண்முகம் இதைத் தெரிவித்தார்.
பேரிடர் நிர்வாகம், அபாயத்தைக் குறைத்தல் ஆகியவை தொடர்பாக புதிய, மேம்பட்ட ஆற்றல்கள் தேவை என்று கூறிய அமைச்சர், உலகம் எங்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான நிறைய பேரிடர்கள் நிகழ்ந்து வருவதைச் சுட்டினார்.
கடந்த ஆண்டு நிகழ்ந்த 389 பேரிடர்களில் பெரும்பான்மை யானவை பருவநிலை மாற்றம் தொடர்பானவை என்றார் திரு சண்முகம்.
அவை சுமார் 100 மில்லியன் உலகமக்களைப் பாதித்ததுடன் 170 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$229 பில்லியன்) அதிகமான இழப்பை ஏற்படுத்தின.
பேரிடர் நிர்வாகத்தை மேம்படுத்தும் முயற்சிகள் நடந்துவருவதாகக் கூறிய அவர், மனிதாபிமான உதவிக்கான ஆசியான் ஒருங்கிணைப்பு நிலையமும் தெமாசெக் அறநிறுவனமும் கடந்த மே மாதம் கையெழுத்திட்ட நோக்கக் குறிப்பை அதற்குச் சான்றாகச் சுட்டினார்.
அந்தப் பரந்துபட்ட ஒத்துழைப்பில் பேரிடர் நிர்வாகத்தில் புத்தாக்கமும் புதிய தொழில்நுட்பங்களின் உருவாக்கமும் அடங்கும் என்று அமைச்சர் விவரித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் நடை பெறும் பேரிடர் குறித்த ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டம், பேரிடர் நிர்வாகம் குறித்த ஆசியான் செயற்குழு ஆகியவற்றின் தலைமையை சிங்கப்பூர் இவ்வாண்டு ஏற்றுள்ளது.