செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
13cc173f-b52a-4753-b50f-d313adccab5a
-

சுபாஷ் ஆனந்தனுக்குப் புகழாரமாக இராமாயணம் நாட்டிய நாடகம்

மறைந்த பிரபல வழக்கறிஞர் சுபாஷ் ஆனந்தனுக்குப் புகழாரம் சூட்டும் விதமாக ஸ்ரீ சாஸ்தா சங்கம் எனும் அமைப்பு நாளை சனிக்கிழமை 16ஆம் தேதி 'இராமாயணம்: பட்டம் சூட்டும் விழாவை நினைவுகூர்தல்' எனும் நாட்டிய நாடகத்தைப் படைக்கவுள்ளது. தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் உள்ள டிராமா செண்டரில் இரவு ஏழு மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும்.

புல்லாங்குழல் இசைக் கலைஞர் கானவினோதனுடன் சேர்ந்து நிகழ்ச்சி படைக்கப்படுவதாக சங்கம் தெரிவித்தது. நிகழ்ச்சியின் நடனமணிகள், கலை இயக்குநர் அனைவரும் புதியவர்கள் ஆவர். கடந்த 2003ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட சங்கம், தனது செயல்பாடுகளை இன்னும் அதிகப்படுத்த நிதி திரட்டும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சட்டவிரோதமாக லாரி ஓட்டியவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை

சட்டவிரோதமாக ஓட்டிய லாரியை மோதி, அதில் தம்முடன் பயணம் செய்தவருக்கு மூளையில் மிகவும் மோசமான காயம் ஏற்படச் செய்த கெர்வின் ஆங் சின் வீ, 23, என்ற சிங்கப்பூரருக்கு நேற்று இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமுற்ற மலேசியரான திரு கியூ லியன் கூய், இவ்வாண்டு ஜூலை வரை படுத்த படுக்கையாய் இருந்தார். அவரால் பேசவோ நடக்கவோ முடியவில்லை என்றும் கைவிரல்களைச் சற்றே தான் அசைக்க முடிந்தது என்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் தீரஜ் ஜி சாய்னானி நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அந்த விபத்து நிகழ்ந்தது. மிகவும் மோசமாக லாரி ஓட்டியதற்காக அவருக்கு ஏற்கெனவே குற்றப்புள்ளிகள் வழங்கப்பட்டு அவருக்கு வாகனம் ஓட்ட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. அது பற்றி தமது முதலாளியிடம் தெரிவிக்காமல் ஆங் லாரியை ஓட்டினார்.

ஆங் எல்லாப் பிரிவு வாகனங்களையும் ஓட்டுவதற்கு நேற்று எட்டு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஷங்ரிலா கலந்துரையாடல் அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெறும்

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஷங்ரிலா கலந்துரையாடல் அடுத்த ஆண்டு ஜூன் 10 முதல் 12 வரையிலான தேதிகளில் நடைபெறவுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வந்த அந்த உயர்நிலைக் கூட்டம், கொவிட்-19 கிருமிப் பரவலால் நடைபெறவில்லை.

பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தற்காப்பு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழில் துறைத் தலைவர்கள், செல்வாக்கு மிகுந்த உத்திபூர்வ நிபுணர்கள் ஷங்ரிலா கலந்துரையாடலில் பங்கெடுப்பது வழக்கம்.

லண்டனில் செயல்படும் உத்திபூர்வ ஆய்வுகளுக்கான அனைத்துலகக் கழகம் எனும் ஆய்வு நிறுவனம் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்கிறது.

இல்லத் தனிமை உத்தரவை மீறியவருக்கு ஐந்து மாதச் சிறை

தானா மேராவில் உள்ள ஒரு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் பாதுகாவலராகப் பணியாற்றிய புர்ஹாண்டோ ரேஜோ, 56, என்பவருக்கு கொவிட்-19 தொற்று இருந்தபோதும் அவர் வெளியில் சென்றார்.

இல்லத் தனிமை உத்தரவில் வைக்கப்பட்ட அவரிடம். வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று பலமுறை வலியுறுத்தப்பட்டது.

ஆனால் நோன்புப் பெருநாளில் தமது குடும்பத்துக்கு போதிய பணம் இருக்காது என்று பயந்த புர்ஹாண்டோ, கடந்த மே 23ஆம் தேதி கடன் நிறுவனத்திடம் கடன் கேட்கச் சென்றார். உத்தரவை மீறிய குற்றத்துக்காக அவருக்கு நேற்று ஐந்து மாதம், இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.