போலி நிறுவனங்களுடனான 'போன்சி' போன்ற வேலை தொடர்பான மோசடிகள் தொடர்பில் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட பதினாறு ஆடவர்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் போலிஸ் படை திங்கட்கிழமையன்று தீவு முழுவதும் மோசடிக்கு எதிரான அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது. வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பதிவுகள், இணைய விளம்பரங்கள் ஆகியவற்றில் அதிகச் சம்பளம் வழங்கும் பகுதிநேர வேலைகளைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததைப் பற்றி போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு வேலை நாடி வருபவர்களுக்கு போலி இணைய வேலைகள் வழங்கப்படும். சமூக ஊடகக் கணக்குகளை/பக்கங்களைப் பின்தொடர்வது, பதிவுகளுக்கு 'லைக்' போடுவது உள்ளிட்ட எளிய வேலைகள் இவற்றில் அடங்கும் என்று போலிசார் குறிப்பிட்டனர்.
தரகுத் தொகை ஈட்ட வேண்டுமாயின், குறிப்பிட்ட சில இணையத்தளங்கள் மற்றும் கைபேசிச் செயலிகளில் இலவச உறுப்பினர் கணக்குகளைப் பதிந்துகொள்ளுமாறு கூறப்படும்.
கணக்குகளைத் திறந்த பிறகு $10 முதல் சில ஆயிரம் வெள்ளி வரையிலான கட்டணம் கொண்ட வெவ்வேறு உறுப்பினர் திட்டங்கள் பரிந்துரைக்கப்படும். வேலைக்குத் தகுந்த தரகுத் தொகை தரப்படும் என்றும் கூறப்பட்டது. கட்டணத்தை இணைய நாணயம் அல்லது வங்கிப் பரிமாற்றம் வழி அறிமுகமில்லா நபர்களுக்குச் செலுத்திய பின்னர், வேலையைச் செய்து தரகுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உறுப்பினர்த் திட்டத்தில் இணைந்த ஆரம்பக் கட்டத்தில் தரகுத் தொகை கிடைத்துவிடுவதால் இது சட்டப்படியான ஒரு வேலை என்று சிலர் நம்பினர். இருப்பினும், தரகுப் பணம் பின்னாளில் கிடைக்காதபோது, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்டனர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.

