வீட்டிலேயே தனிமை உத்தரவை நிறைவேற்றலாம் என்பதற்காக சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒருவர் சாங்கி விமான நிலையத்தில் பொய்த் தகவல்களைத் தாக்கல் செய்ததாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தைவானைச் சேர்ந்த லு யி யின், 48, என்ற அந்த ஆடவர் மீது, தொற்றுநோய்ச் சட்டத்தின் கீழ் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
அவர், தன்னைப் போன்று பயணங்களை மேற்கொண்டுள்ள, தனிமை உத்தரவை நிறைவேற்றி வருகின்ற குடும்பத்தினருடன் வீட்டில் தனியாக இருக்கப்போவதாக அல்லது தனியாக வீட்டில் தனிமையில் இருக்கப்போவதாக படிவத்தில் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, ஜூலை 14 முதல் 28 வரை வீட்டில் தனிமையில் இருக்கும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.
அடுத்த நாளன்று அமலாக்க அதிகாரிகள் அவர் தங்கி இருந்த வீட்டுக்குச் சென்று பரிசோதித்தபோது, வீட்டில் இருந்த இரண்டு பேர் அந்த ஆடவரைப்போல பயணம் மேற்கொண்டிருக்கவில்லை என்பது தெரிந்தது.
ஆடவர் லு பயணம் மேற்கொண்ட நாடு, அவரின் வீட்டு முகவரி, குடும்ப உறுப்பினர்கள் போன்ற விவரங்களை நீதிமன்றப் பத்திரங்கள் தெரிவிக்கவில்லை. லுவுக்கு $5,000 பிணை அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அவரின் வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.