புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாக உட்கொள்ளப்படும் ‘பெக்ஸாரோட்டீன்’ மார்பகப் புற்றுநோய் தீவிர நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த நிலையிலான மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
வீரியம் மிக்க, பரவும் தன்மை கொண்ட மார்பகப் புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிராக இந்த மருந்து திறம்படச் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இந்த உயிரிணுக்களின் தீவிரத்தை மட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.
புற்றுநோய் உயிரணுவின் தீவிரம் குறைக்கப்படுவதால், மருந்து மூலம் நோய் தீர்க்கும் சிகிச்சை முறையான கீமோதெரபிக்கு அவை அடிபணியும். அத்துடன் புற்றுநோய்க் கட்டி உருவாவதைக் குறைக்கும் ஆற்றலும் மீண்டும் புதிய உயிரணு உருவாகாமால் தடுக்கும் சக்தியும் இந்த மருந்துக்கு இருக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.
இந்தப் புதிய முறையிலான சிகிச்சை பலன் தருகிறதா என்பதை சோதித்து அறிய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மருத்துவப் பரிசோதனை தொடங்கியது. மூன்றாண்டு காலம் நீடிக்கக்கூடிய இந்தச் சோதனைக்கு இதுவரை மூன்று நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் புதிய சிகிச்சை முறை சோதித்துப் பார்க்கப்படும்.
அடுத்தடுத்து 12 நோயாளிகளை இதில் சேர்க்கவும் ஆக அதிகமாக 20 நோயாளிகளை இதில் ஈடுபடுத்தவும் திட்டம் உள்ளது.