இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கப்படவுள்ள $130 மில்லியன் சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுத் திட்டம், செயலி வடிவத்தில் இருக்கும்.
மக்கள் கழகத்துடன் சேர்ந்து ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்கள் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனைத் தெரிவித்தன.
வணிகர்களும் உணவங்காடிக் கடைக்காரர்களும் இந்தப் பற்றுச்சீட்டுகளை ஏற்றுக்கொள்ள, சமூக மேம்பாட்டு மன்றங்கள் மற்றும் எஸ்ஜி மின்னிலக்க அலுவலகத்தைச் சேர்ந்த பற்றுச்சீட்டுத் தூதர்கள் உதவி செய்வர்.
இந்தத் திட்டத்தின்கீழ், எதிர்வரும் மாதங்களில் 1.3 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் தலா $100 பற்றுச்சீட்டுகளைப் பெறவிருக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகள் அறிமுகம் கண்டன. அரசாங்க உதவித் திட்டங்கள் மூலம் 400,000 குறைந்த வருமான குடும்பங்கள் இதற்கு அடையாளம் காணப்பட்டன. உள்ளூர் கடைகளில் செலவழிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் $50 காகிதப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.