சிங்கப்பூரின் செந்தோசா பகுதியில் '5ஜி' தொடர்பான பொதுத் துறை முன்னோட்டத் திட்டங்கள் தொடங்கிவிட்டன. '5ஜி@செந்தோசா' குறித்து தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று தெரிவித்தார்.
ஓட்டுநரில்லாத சாலைத் துப்புரவு வாகனங்களை வேறு இடத்தில் இருந்தவாறு ஒருவர் இயக்குவது, பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான மின்னிலக்க அறிவிப்புப் பலகைகளைப் பயன்படுத்துவது போன்ற '5ஜி' கைபேசிக் கட்டமைப்புகள் சார்ந்த சில புதிய செயலிகள் மூலம் அரசாங்கம் சோதனையிடுகிறது.
அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (கவ்டெக்), செந்தோசா மேம்பாட்டுக் கழகம், சிங்டெல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
அறிவார்ந்த தேசம் தொடர்பான வெவ்வேறு செயலிகளின் '5ஜி' ஆற்றல்களை அரசாங்க அமைப்புகள் கண்காணித்து, அவற்றை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக சிங்கப்பூர் முழுவதும் நடைமுறைப்படுத்துவதே இந்த முன்னோட்டத் திட்டத்தின் நோக்கமாகும்.
மனிதவளத்தை மிச்சப்படுத்துவது, வேலையிடத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவது, மேலும் எளிதான முறையில் சேவைகளை மக்களிடத்தில் சேர்ப்பது போன்றவற்றின் தொடர்பில் சில செயலிகள் அமையலாம்.
'4ஜி' கட்டமைப்பைக் காட்டிலும் 10 மடங்கு விரைவாகவும் கூடுதல் அலைவரிசை கொண்டதாகவும் '5ஜி' கட்டமைப்பு விளங்குகிறது. கூடுதல் அலைவரிசை கட்டமைப்புடன் மேலும் அதிகமான சாதனங்கள் இணைந்துகொள்ளலாம்.
தற்போது 10 முன்னோட்டத் திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டன.
பொதுத் துறை அமைப்புகளின் 15 முன்னோட்டத் திட்டங்களை இவ்வாண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்தும் இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் முதற்பாதிக்குள் குறைந்தது 30 முன்னோட்டத் திட்டங்களை அமல்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
செந்தோசா முன்னோட்டத் திட்டங்களுக்குத் துணைபுரியக்கூடிய '5ஜி' தீர்வுகளை அரசாங்க அமைப்புகளுக்கு வழங்கும் நிலையில் உள்ள நிறுவனங்களை அடையாளங்காண, சிங்டெல் நிறுவனத்துடன் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் இணைந்து செயல்படும்.
தொலைத்தொடர்பு செயல்பாடுகளுக்கு '5ஜி' கட்டமைப்பே ஏதுவானது என்று கூறப்பட்டது. 2025ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் '5ஜி' கட்டமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே முன்னோட்டத் திட்டங்கள் தொடர்பில் பாதுகாப்பு நடைமுறைகளும் நடப்பில் இருக்கும் என்று கூறப்பட்டது.
செந்தோசா முன்னோட்டத் திட்டங்கள் அனைத்தும் வாரஇறுதி நாட்கள், வருகையாளர்கள் அதிகமாக இருக்கும் உச்ச நேரங்களில் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டது.

