கொவிட்-19 கொள்ளைநோய் தொடங்கியது முதல், உலகெங்கிலும் தொடர்புகளின் தடமறியும் செயலிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்திருப்பதை பயனாளர்களுக்குத் தெரிவிப்பதே இச்செயலிகளுக்கு வழக்கம்.
இருப்பினும், தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதை முன்னதாகவே எச்சரிக்கும் அமைப்புமுறையை இச்செயலிகள் கொண்டிருந்தால் அது மேலும் பயனுள்ளதாக இருக்கும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தவாறு தொற்று ஏற்படும் அபாயத்திலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளலாம் என்று கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் லோ போ-ஷென் கூறினார். அவர் உருவாக்கிய 'நொவிட்' செயலியின் நோக்கமும் அதுவே. பயனாளருடன் அடிக்கடி தொடர்பில் இருப்போரைக் கொண்ட கட்டமைப்பை, செயலியின் எச்சரிக்கை அமைப்புமுறை முன்னரே கண்காணிக்கும்.
'டிரேஸ்டுகெதர்' செயலி போன்றே 'புளுடூத்' தொழில்நுட்பத்தை 'நொவிட்' பயன்படுத்தி ஒருவரது தொடர்புகளை வரிசைப்படுத்தும். உதாரணத்திற்கு, நேரடித் தொடர்பாக தினமும் பார்க்கும் குடும்ப உறுப்பினரை முதல் தொடர்புநிலை என்றும் இதுவரை பார்த்திராத அந்தக் குடும்ப உறுப்பினருடைய வேலை நண்பரை இரண்டாவது தொடர்புநிலை என்றும் செயலி வகுத்துக்கொள்ளும்.
இதன்படி, 12 தொடர்புநிலைகள் வரை உள்ளன. கொவிட்-19 உறுதிசெய்யப்பட்ட ஒருவர், அந்த 12 தொடர்புநிலைகளுக்குள் இருந்தால், பயனாளருக்குத் தெரிவிப்பதுடன் அவரது தொடர்புநிலை என்ன என்பதையும் செயலி குறிப்பிடும்.
கொவிட்-19 கிருமியைவிட கொடிய கொள்ளைநோய்கள் எதிர்காலத்தில் வரக்கூடும். அந்நிலையில் தொடர்புகளின் தடமறியும் இந்த மாறுபட்ட எச்சரிக்கை முறை, பெரிதும் கைகொடுக்கலாம் என்கிறார் திரு லோ.