சிங்கப்பூர் அதன் மின்சாரக் கட்டமைப்பைக் கரிமமில்லாத ஒன்றாக மாற்ற பல்வேறு உத்திமுறைகளை ஆராய்ந்து வருகிறது. சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிப்பது, வட்டார நாடுகளிலிருந்து குறைந்த அளவிலான கரிமம் கொண்ட எரிசக்தியை இறக்குமதி செய்வது போன்ற உத்திகள் ஆராயப்படுவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
முதல்முறையாக நடைபெற்ற சிங்கப்பூர் பசுமைத் திட்டப் பாதுகாப்பு நிகழ்வில் அவர் நேற்று உரையாற்றினார். நிகழ்வுக்கு வர்த்தக, தொழில் அமைச்சு ஏற்பாடு செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரின் சூரிய சக்தி ஆற்றல் ஆறு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் சூரிய சக்தி பயன்பாட்டை ஐந்து மடங்கு உயர்த்துவதே இலக்கு. ஓர் ஆண்டுக்கு ஏறத்தாழ 350,000 வீடு
களுக்குத் தேவையான எரிசக்திக்கு இது சமம். வட்டார நாடுகளின் எரிசக்திக் கட்டமைப்புகளையும் பயன்படுத்த சிங்கப்பூர் திட்ட
மிட்டுள்ளதாக திரு கான் தெரிவித்தார்.
"100 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் சோதனைத் திட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். வட்டார நாடுகளிலிருந்து வரும் பெரிய அளவிலான, குறைந்த கரிமம் கொண்ட எரிசக்தியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்தச் சோதனைத் திட்டம் உதவும்," என்று திரு கான் கூறினார்.
இதற்கிடையே, லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் எரிசக்தி ஒருங்கிணைப்புத் திட்டமும் தொடங்கியுள்ளது. இந்த நான்கு நாடுகளுக்கு இடையே 100 மெகாவாட் வரையிலான எரிசக்தி வர்த்தகமும் இத்திட்டத்தில் அடங்கும்.
"சிங்கப்பூர் ஓரு சிறிய நாடு. மறுசுழற்சி செய்யக்கூடிய எரிசக்தி வளங்களை வைத்திருக்க இயற்கை வளங்கள், போதுமான நிலம், தகுந்த பருவநிலை இல்லை. எனவே, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய மேம்பாடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை பருவநிலை மாற்றம் உலகம் தற்போது எதிர்நோக்கும் சவாலாகும்," என்று அமைச்சர் கான் கூறினார்.
சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030 இவ்வாண்டு தொடங்கியது. கரிம வெளியேற்றத்தைக் குறைக்க இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன.
இயற்கைச் சூழலில் அமைந்துள்ள நகரம், நீடித்த நிலைத்தன்மையுடனான வாழ்க்கைமுறை, எரிசக்தி மீட்டமைப்பு, பசுமைப் பொருளியல், மீள்திறன்மிக்க எதிர்காலம் ஆகியவை அந்த ஐந்து முக்கிய அம்சங்களாகும்.
வர்த்தகர்களையும் தொழில் துறைப் பிரதிநிதிகளையும் ஈடு
படுத்துவதே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் இலக்கு.
நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில் துணை அமைச்சர்களான லோ யென் லிங்கும் ஆல்வின் டானும் கலந்துகொண்டனர். பசுமைப் பொருளியல் சிங்கப்பூருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் திரு கான் குறிப்பிட்டார். "கரிமச் சேவை நடுவமாக சிங்கப்பூர் உருவெடுக்கும் வாய்ப்பு இருப்பதை நாங்கள் உணர்கிறோம்.
"குறைந்த அளவிலான கரிமம் கொண்ட எதிர்காலத்தை உலக நாடுகள் நோக்கிச் செல்லும்போது அதற்கான திட்டங்களை நிர்வகிக்க நிறுவனங்களுக்குத் தகுந்த நிபுணத்துவம் தேவைப்படும்.
"கரிமமற்ற எதிர்காலத்தை இலக்காகக் கொண்டுள்ள வட்டார பங்குதாரர்களுடன் பங்காளித்துவ அடிப்படையில் ஈடுபடவும் அவர்
களுக்கு ஆதரவு வழங்கவும் நாங்கள் விரும்புகிறோம்," என்றார் திரு கான். நீடித்த நிலைத்தன்மைத் திட்டங்கள் தொடர்பாக உள்ளூர் வர்த்தகங்களுக்கு ஆதரவு வழங்க பயிலரங்குகளை ஆதரிக்கும் திட்டத்தை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் இம்மாதத் தொடக்கத்தில் தொடங்கியது.
இதற்கிடையே சிங்கப்பூர், உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு, தயார்நிலை எரிபொருள் வசதிகளை உருவாக்கவிருக்கிறது. அதிலிருந்து மின்சார நிறுவனங்கள் மின்சாரம் தயாரிப்பதற்கு எரிபொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.