ஓட்டுண்ணி நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற சம்பவங்கள் கடந்த மாதம் ஐந்து முறை நிகழ்ந்துள்ளதாக சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்தது. அந்தக் கடத்தல் சம்பவங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
செப்டம்பர் 10ஆம் தேதிக்கும் அக்டோபர் 6ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் 23,100 ஐவெர்மெக்டின் மாத்திரைகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படவிருந்ததாக ஆணையம் தெரிவித்தது.
ஐவர்மெக்டின் அந்த மருந்து கொவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாக்கும் என்ற தவறான தகவல்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.
சாங்கி ஏர்ஃபிரைட் சென்டர், ஏர்மெயில் டிரான்சிட் சென்டர் ஆகிய இடங்களில் 2,000 ஹைட்ரோகுளோரோகுயின் மற்றும் 2,048 மைகோஃபீனோலேட் மொஃபிடில் மாத்திரைகளும் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கடத்தப்படவிருந்ததை அதிகாரிகள் முறியடித்தனர் என்றும் ஆணையம் தெரிவித்தது. அங்கீகரிக்கப்படாத மருந்துகளை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கடத்துவது குறித்து ஐசிஏ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் 65 வயதான மாது ஒருவர், இதுபோல் அங்கீகரிக்கப்படாத ஐவர்மெக்டின் என்னும் மாத்திரையை உட்கொண்டதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்து, கைகால் மூட்டுகள் வீங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மாதுக்கு இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் கொவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்று அவரது தேவாலய நண்பர் ஒருவர் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

