தகாஷிமயா கடைத்தொகுதியின் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பு வகித்து வந்த ஒருவருக்கு, கையூட்டு பெற்றதற்காக பத்து மாதச் சிறைத் தண்டனையும் $42,500 அபராதமும் நேற்று விதிக்கப்பட்டது.
சான் குவென் தோங், என்ற 64 வயது ஆடவர் அந்த நிறுவனத்தின் மூத்த பிரிவு மேலாளராகவும் பணிபுரிந்தார். கடைத்தொகுதியில் குறைவான எண்ணிக்கையில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததை மறைப்பதற்காக அவர் கையூட்டு பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு நிறுவனங்கள், ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி முறையான சேவை வழங்குவதை சான் குவென் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறிருக்கையில், சான் பாதுகாப்பு அதிகாரிகள் குறைவாக வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதை மறைப்பதற்காக அந்த பாதுகாப்பு நிறுவனங்களிடம் மாதந்தோறும் $4,000 கையூட்டு பெற்றதாகக் விசாரணையில் தெரியவந்தது.